Home இலங்கை மஹர சிறைச்சாலை இளைஞர் கொலை : சாட்சியை மூடிமறைக்க முயற்சி 

மஹர சிறைச்சாலை இளைஞர் கொலை : சாட்சியை மூடிமறைக்க முயற்சி 

by admin

பொல்லினால் அடித்து சிறைச்சாலை அதிகாரிகளால் இளம் கைதி கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்திய சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியை மறைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவிந்த இசுறு என்ற இளம் கைதியை தாக்கி கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கிய கைதி தற்போது மஹர சிறைச்சாலையில் இருந்து பொலன்நறுவை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காக முன்னிற்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

குற்றத்தை மூடிமறைக்கும் நோக்குடனேயே சாட்சியான மற்றைய கைதியை வேறு சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி சேனக்க பெரேரேரா ஜனநாயகத்திற்கான ஸ்ரீலங்காவின் ஊடகவியலாளர் அமைப்பிற்கு கூறியுள்ளார்.

காவிந்துவை மஹர சிறைச்சாலையின் அதிகாரிகள் பொல்லினால் தாக்குவதை நேரில் கண்ட கைதியிடம் சத்திய கடதாசியொன்றை பெற்றுக்கொள்வதற்காக தாம் பொலன்நறுவை சிறைச்சாலைக்கு சென்ற போது, உயர்மட்ட அதிகாரிகள் உத்தரவின் பிரகாரம் குறித்த சிறைக்கைதியிடம் சத்தியகடதாசியை பெற முடியாது என பொலநன்றுவை சிறைச்சாலை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக சட்டத்தரணி சேனக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்த பின்னரே தாம் அந்தக் கைதியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சாட்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாட்சியான கைதியின் அனைத்து பாதுகாப்பையும் வழங்குமாறு, நீதவான் கட்டளையிட்டுள்ளதாக சட்டத்தரணி சேனக்க பெரேரரா ஜே.டி.எஸ் சிற்கு தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் ஜுன் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வத்தளை நீதவான் புத்திக்க சி ராகல முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, மஹர சிறைச்சாலையின் பல சிறைச்சாலை அதிகாரிகளால் நீண்ட பொல்லுகளால் தாக்கப்பட்ட பின்னர் காவிந்த இசுறு திசேர உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான கைதி சாட்சியம் அளித்துள்ளார்.

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற போது மஹர சிறைச்சாலையின் சுவரில் இருந்து விழுந்த காவிந்த இசுறு என்ற இளம் கைதி கடந்த மே மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்ததாக அதிகாரிகளும் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு வடக்கு ராகமை போதனா வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியர்களும் கூறியுள்ளனர்.

எனினும் பசியுடன் இருந்த தனது மகன், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவிந்த இசுறுவின் பெற்றோர் அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். தமது புதல்வர் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறியுள்ள அவரது தாயாரான ஆர்.எம்.கருணாவதி, கை, கால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் முன்னர் கூறியிருந்தார்.

நான் கூற வேண்டியது என்னவென்றால் எனது மகன் அடித்தே கொலை செய்யப்பட்டான். நாங்கள் காலையில் சென்று பார்க்கும் போது இரத்தப் போக்கு காணப்பட்டது. தலையின் பின்புறத்தில் பாரிய காயம் இருந்தது. கால்கள் உடைக்கப்பட்டிருந்தன.கையில் பாரிய வெடிப்பு காணப்பட்டது. கை உடைக்கப்பட்டிருந்தது.

சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்வது ஒரு நாகரிகமாக மாறிவிட்டதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் பிரதம செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கூறியிருந்தார் #மஹரசிறைச்சாலை #இளைஞர்  #கொலை #சாட்சி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More