Home இலங்கை யாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…

யாழ் காவல் நிலையங்களில், மேலங்கிகளை அகற்றத் துடிக்கும் காவற்துறை…

by admin

யாழில் உள்ள காவல் நிலையங்களில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களின் மேலங்கிகளை (சேர்ட் , ரி.சேர்ட்) என்பவற்றை அகற்றிய  பின்னரே அவர்களை தடுப்பு காவலில் காவற்துறையினர் தடுத்து வைப்பதாக குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

யாழில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்  நிலையங்களில் சந்தேக நபர்களை தடுத்து வைக்க முதல் அவர்களின் மேலாடைகளை காவற்துறையினர் கழட்டிய பின்னரே தடுப்பு காவலில் தடுத்து வைக்கின்றார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளுக்கு உரிய வரி அனுமதி பத்திரம் மற்றும் காப்புறுதி பத்திரம் என்பன தொலைந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கோப்பாய் காவல்  நிலைய பொறுப்பதிகாரி கைது செய்திருந்தார்.

அதன் போது குறித்த நபர் தான் கைது செய்யப்பட்டதை தனது வீட்டாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்க முயற்சித்த போது அவரது தொலைபேசியையும் பறித்து வைத்துள்ளார்.

கைது செய்யப்படுவதனை அவதானித்த அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிள் புத்தகத்தினை வீட்டிற்கு சென்று அதனை காவல்  நிலையம் கொண்டு சென்ற போதிலும், காவல் நிலையப்  பொறுப்பதிகாரி சுமார் ஒரு மணி நேரம் குறித்த நபரின் மேலங்கியை (ரி.சேர்ட்) கழட்டி , தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்த பின்னரே அவரை விடுவித்திருந்தார்.

இருந்த போதும் மோட்டார் சைக்கிளை மூன்று நாட்கள் இழுத்தடிப்பு செய்த பின்னரே வழங்கினார். அதனால் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மூன்று நாட்களாக பல மணிநேரம் காவல் நிலையத்தில் காவல் இருந்தே மோட்டார் சைக்கிளை மீள பெற்று இருந்தார்.

அதே போன்று யாழ்ப்பாண காவல்  நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களுடைய மேலங்கிகளையும் காவற்துறையினர்  கழட்டிய பின்னரே தடுப்பு காவலில் தடுத்து வைக்கின்றார்கள்.

காவற்துறையினரின் இத்தகைய செயற்பாடு தொடர்பில் கேட்ட போது , காவற்துறை தடுப்பு காவலில் சந்தேக நபர்கள் தமது மேலங்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டமையால் மேலங்கியுடன் எவரையும் தடுத்து வைப்பதில்லை என கூறினார்கள்.

காவல்  தடுப்பு காவலில் மேலங்கியை (சேர்ட் , ரி.சேர்ட்) கழட்டி சந்தேகநபர்களை தடுத்து வைப்பது சித்திரவதை குற்றத்திற்குள் உள்ளடங்கும். கைது செய்யப்படும் நபர்களின் சுய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாதவாறு அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடாத்த வேண்டும். உடல் ரீதியாக மாத்திரமின்றி உள ரீதியாக துன்புறுத்துவதும் சித்திரவதை குற்றத்திற்குள் உள்ளடங்கும். என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

காவல்  தடுப்பு காவலில் மேலங்கியின்றி எவரேனும் தடுத்து வைக்கப்பட்டால், அல்லது அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More