Home இலங்கை மன்னார் மாவட்டத்தில் இது வரை 535 பேருக்கு பி.சீ.ஆர்.பரிசோதனை

மன்னார் மாவட்டத்தில் இது வரை 535 பேருக்கு பி.சீ.ஆர்.பரிசோதனை

by admin
மன்னார் மாவட்டத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனைகளின் போது எவருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை என பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மன்னாரில் மூவருக்கு தொற்று உள்ளதாக மக்கள் மத்தியில் வெளியான தகவல் தவறானது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஏப்பிரல் மாத ஆரம்பத்தில் இருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் 535 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பரிசோதனைகள் அனைத்தும் சமூக பரிசோதனைகளாகவே இடம் பெற்றது.
தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள்,மீனவர்கள், கடற்படை, காவல்துறையினர் மற்றும் கொழும்பிற்கு அடிக்கடி சென்று வருபவர்கள் என பல தரப்பட்ட அபாயம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட 535 பரிசோதனைகளின் போதும் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளது.
எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மன்னார் மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு 200 பி.சீ.ஆர்.பரிசோதனைகள் சமூதாய மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சினாலும்,தொற்று நோய் விஞ்ஞான பிரிவினாலும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு மேற்கொள்ள இருக்கின்றோம்.
இதற்கு மேலதிகமாக கடந்த வாரம் இந்திய கடல் எல்லையினை தாண்டிய நான்கு மீனவர்கள் பேசாலை மற்றும் வங்காலைப்பாடு பகுதியில் கடற்படையினரினால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான பி.சீ.ஆர். பரிசோதனைகள் எதிர் வரும் வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என தேர்தல் திணைக்களத்தினாலும்,  தேர்தல் ஆணையாளரினாலும் விடுக்கப்பட்ட அறிவூறுத்தல்களுக்கு அமைய மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நடமாடும் மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தொற்று நீக்கும் செயற்பாடுகளும் நகர, பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற போதும் எமது சுகாதார பகுதியினர் உதவிகளையும் மேற்பார்வை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவார்கள்.
மன்னார் மாவட்டத்தில் சமூதாய பரிசோதனைகள் மேலதிகமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நோயளர்களில் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப் படுகின்றவர்களுக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றது.
அவ்வாறு மூன்று பரிசோதனைகள் கடந்த புதன் கிழமை அனுப்பப்பட்டு  முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை(24) கிடைக்கப்பெற்றது.எந்த நபருக்கும் தொற்று ஏற்படவில்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
ஆனால் முடிவுகள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து அனுப்பப்படுகின்ற போது கிளிநொச்சியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள சிலருக்கு தொற்று உள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தவறுதலாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தொற்று உள்ளதாக மக்கள் மத்தியில் பிழையான கருத்து சென்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். #மன்னார்  #கொரோனா #பிசீஆர் #தனிமைப்படுத்தல் #பரிசோதனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More