Home இலங்கை தமிழ்மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

தமிழ்மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

by admin

தமது தாயகம், மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆழமானது. ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த பற்றும் அரசியல் அறிவும் அரசியல்வாதிகளிலும் பார்க்க மேம்பட்டிருப்பதை பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை அபிலாசைகளுக்காகவும், அதன் பால் அவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் தன்னார்வத்துடன் பல போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். குறுகிய கால அவகாசங்களில் தமிழ் மக்கள் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்ட கதவடைப்பு போராட்டங்களிலும் எழுகதமிழ் போன்ற பேரணிகளிலும் உணர்வு பூர்வமாக இணைந்து தமது முழு ஆதரவினையும் வழங்கியிருந்தனர். அதே போன்று எமக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் தேர்தல் அரசியல் கடந்து தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் சில கோரிக்கைகளையும் அனைவரும் கருத்திலெடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.

தேர்தல் அரசியலால் நாம் பிளவுபடுவதோ, குழுக்களாக பிரிந்து நின்று முரண்படுவதோ ஆரோக்கியமாகாது. அழுத்தங்களாலும் சூழ்நிலைகளாலும் அறியாமையாலும் தடம் மாறி நிற்கும் மக்கள் நம்மவர்கள் அல்ல என்றும் ஆகிவிடாது. அவர்களினை எதிரிகளாக நாம் உருவகிக்கவும் முடியாது. அவர்களையும் தடம் மாற்றி ஒற்றுமைப்படுத்தும் பாரிய பொறுப்பு நம்அனைவருக்கும் இருக்கின்றது.ஒரு வலுவான கொள்கை அடிப்படையிலும் அந்த கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாட்டுத் தளத்திலும் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதை விடுத்து தங்களுக்குள் மோதிக் கொள்வதனை அனுமதிக்க முடியாது.

70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது துயரங்களுக்கு மேலதிகமாக தற்பொழுது மாறி வரும் அரசியல் சூழ்நிலைகளால் ஏற்படும் அழுத்தங்கள்,  கோவிட்19 எனப்படுகின்ற கொரோனாத் தொற்றினால் ஏற்பட்டுவரும் பாரிய பொருளாதார சமூக அழுத்தங்கள் என்பவற்றை எதிர்கொள்வது சம்பந்தமாக பலதரப்பட்டவர்களுடனும் தொடர்ச்சியாக நாம் கலந்தாலோசித்து வருகிறோம். இந்த கலந்துரையாடல்களிலே தேர்தல் அரசியல் கடந்து எமது அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒருங்கமைக்கப்பட்ட ஒற்றுமையான தளம் ஒன்றின் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இவற்றை வெற்றிகரமாக முன்னகர்த்த பொதுமக்களுடன் சேர்ந்து இயங்கக்கூடிய நேர்மையான விலைபோகாத அரசியல் பிரதிநிதிகள் எமக்கு அவசியமாகின்றது. அந்த வகையிலே எமது வாக்குரிமையை சரியாகப்பயன்படுத்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு எம்முன்னே எழுந்திருக்கிறது. அதற்காக பின்வரும் விடயங்களை கருத்தில் எடுக்குமாறு தமிழ் மக்கள் பேரவையானது அனைவரையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

1. எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாத கட்சிகளையும், அவற்றை தேர்தல் காலங்களில் மட்டும் உச்சரிக்கும் கட்சிகளையும்,  அவற்றினால் களமிறக்கப்பட்டிருக்கும் குழுக்களையும் முற்றுமுழுதாக நிராகரிப்போம். எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் விற்பதை தவிர்ப்போம். இவ்வாறானவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும் கேள்விக்குள்ளாகி விடும் என்பதனை உணர்ந்து கொள்வோம்.

2. எமது வாக்குகளை வீணடிப்பதற்காகவும் சிதறடிப்பதற்காகவும் திட்டமிட்டு பல குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. ஆசனங்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் அற்ற இக்குழுக்களுக்கு நாம் வாக்களிப்பதால் எமது வாக்குகள் விரயமாகும் என்பதை மனதில் நிறுத்துவோம்.

3. சிந்தித்து வாக்களிக்கக் கூடியவர்கள் வாக்களிக்கத் தவறின் பொருத்தமற்றவர்கள் எமது பிரதிநிதிகளாகும் ஆபத்து இருக்கிறது. எனவே தவறாது வாக்களிப்பதோடு மற்றவர்களையும் வாக்களிக்குமாறு ஊக்கப்படுத்துவோம்.

4. பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்கக்கூடியவர்களையும், சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்பு கூறக்கூடியவர்களையும் தெரிவு செய்ய தவறாது எமது வாக்குரிமையையும் மற்றும் மூன்று (03) விருப்பு வாக்குகளையும் பயன்படுத்துவோம்.

5. துறைசார் வல்லுனர்கள், உள்நாட்டு வெளிநாட்டு புலமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினதும் பங்களிப்புடனும் தமிழ் மக்கள் பேரவையானது தெளிவான தீர்வுத் திட்ட வரைபொன்றை மக்கள் முன் வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படைகளை ஏற்று பற்றுறுதியுடன் செயற்படக்கூடியவர்களை எங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய உறுதி கொள்வோம்.

6. வாக்களிப்பதுடன் எமது கடமை முடிந்து விட்டது என்று எண்ணாது தேர்தல் அரசியலுக்கு அப்பால் எமது தேசத்திற்காக, அபிலாசைகளுக்காக கலை கலாசார பொருளாதார மேம்பாட்டிற்காக ஒன்றுபட்டு உழைக்க உறுதி பூணுவோம். தெரிவு செய்யப்படும் எமது பிரதிநிதிகளை நெறிப்படுத்தி வழிப்படுத்தவும் ஆயத்தமாகுவோம். #தமிழ்மக்கள்  #வரலாறு ,#தமிழ்மக்கள்பேரவை #கோரிக்கை #கலைகலாச்சாரம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More