Home இலங்கை 13வது திருத்தம் பற்றிய அனுபவங்கள் – கருத்துக்களை பகிர்வது எனது கடமை

13வது திருத்தம் பற்றிய அனுபவங்கள் – கருத்துக்களை பகிர்வது எனது கடமை

by admin

கேள்வி: ‘இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளிநாட்டு சேவைகள் அதிகாரி நடராஜன் ஆகியோருடன் காணொளி உரையாடல் ஒன்றில் வரும் ஞாயிரன்று நீங்கள் ஈடுபடப் போவதாக அறிந்தோம். இந்த உரையாடலில் நீங்கள் கலந்துகொள்வதன் மூலம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டர்கள் என்பதாகுமா? 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு கூறியிருப்பதன் பின்னணியிலா இந்த நிகழ்வு நடைபெறுகின்றது என ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.

பதில்: இவ்வாறு பலர் எனது மின்னஞ்சலுக்கு கேள்விகள் கேட்டு அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு எனது பதிலை மிகவும் சுருக்கமாக நான் கூறுகின்றேன்.
மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் எனது கருத்துக்களை கூற முடியுமா என்று திருமதி வானதி சீனிவாசன் சார்பாக என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது 13 ஆவது திருத்த சட்டம் முக்கிய ஒரு பேசுபொருளாக இருப்பதால், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றிய எனது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வது எனது கடமை என்றும் அதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் நான் கருதி கலந்துகொள்ள சம்மதித்தேன்.
இந்த நிகழ்வுக்கும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 13 ஆவது திருத்த சட்டம் பற்றி பிரதமர் ராஜபக்ஸ அவர்களிடம் வலியுறுத்தியதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் உதவியும் ஒத்தாசையும் எமக்கு மிகவும் அவசியம். இதற்கு இந்தியாவுடனான தமிழ் மக்களின் சுமூக உறவு அவசியம். இந்தியாவுடன் நாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். ஆனால், இந்தியாவுடனான எமது அணுகுமுறை தனி ஒரு நபர் சார்ந்தோ அல்லது தனி ஒரு கட்சி சார்ந்தோ இருக்க முடியாது. இருக்கக்கூடாது.
எனினும் கௌரவ மோடி தலைமையிலான அரசாங்கமும் தற்போதுள்ள இந்திய கொள்ளை வகுப்பாளர்களும் இவற்றை நன்கு புரிந்து உரிய முறையில் காய்களை நகர்த்துவார்கள் என்றே நான் நம்புகின்றேன்.
தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவமுடையவராகவும் சர்வதேச அரசியலில் மிகச் சிறந்த ராஜதந்திரியாகவும் காணப்படுகின்றார். அவர் எமது பிரச்சனையை திறம்பட கையாளர்வார் என்பது எனது எதிர்பார்ப்பு.
ஆனால் இலங்கை அரசாங்கம் சார்பானவர்கள் மாகாணசபைகளை உடனே நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றார்கள். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களில் மாகாணசபைகளை நீக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. எம்மைப் பொறுத்த வரையில் முழுமையான சமஷ;டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும். இவ்வாறான கருத்துக்களை எல்லாம் இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. இச் சந்தர்ப்பத்தை அதற்காக நான் பயன்படுத்துகின்றேன் எனத் தொிவித்துள்ளாா். #13வதுதிருத்தம் #பாஜக #மோடி #மகிந்த #விக்னேஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More