Home இலங்கை தடை உத்தரவு வழங்க சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரியது மல்லாகம் நீதிமன்றம்

தடை உத்தரவு வழங்க சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரியது மல்லாகம் நீதிமன்றம்

by admin

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் காவல்துறையினா் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினா் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின்
கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் காவல்துறையினரால் நேற்று புதன்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்கு போறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று நாளை வெள்ளிக்கிழமை சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினர் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும்,
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் நேற்று புதன்கிழமை காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது. வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. #பொத்துவில் #பொலிகண்டி #தடைஉத்தரவு #பூர்வீக_நிலங்கள் #சுகாதார,மருத்துவஅதிகாரி #நீதிமன்றம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More