Home உலகம் ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

by admin

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதைபந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது.

காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர்உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின் கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம் மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்றுகூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சமூகஊடகத் தளங்களில் வெளியாகி இருந்தன. அவ்வாறு வானிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவரே இளம்வீரர் ஷாகி அன்வாரி (Zaki Anwari) என்பது நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விளையாட்டு இயக்குநரகமும்(Sports Directorate) இந்தச் செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானின் தேசிய உதைபந்தாட்ட வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உட்படபெரும் எண்ணிக்கையானோர் வீரர் அன்வாரியின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குத் தங்கள் துயரைப் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் சி-17(USAF Boeing C-17) இராணுவப் போக்குவரத்து விமானம் காபூல் சர்வதேச வான் தளத்தில் இருந்து புறப்பட்ட சமயம் பல நூற்றுக்கணக்கான ஆப்கானிய இளைஞர்கள் அந்தவிமானத்தில் ஏற்றிக்கொள்ள முண்டியடித்தனர். இடம் கிடைக்காத பலர் விமானம் ஓடத் தொடங்கியதும் அதன் கீழ் பகுதியில் தொற்றி ஏறிக்கொண்டனர்.அந்த விமானத்தில் அதன் கொள்ளளவை விடவும் ஐந்து மடங்கு அதிகமாக – சுமார் 640 பேர்பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம் ஒன்று சிக்குண்டமை தெரியவந்ததை அடுத்து பயண வழியில் அந்த விமானம்பாதுகாப்புக் கருதி அவசரமாக கட்டாரில் தரையிறங்கிச் சென்றது. வீரர் அன்வாரியின் உடல் எச்சங்களே சக்கரப்பகுதிக்குள் சிக்குண்டிருந்தன என்று சில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தின் வெளிப்பகுதியில் ஏறிப் பயணம் செய்த சிலர் உயிரிழந்தமை தொடர்பாக விசேட விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. 19 வயதான ஷாகி அன்வாரி ஆப்கானிஸ்தானை அமெரிக்கப்படைகள் கைப்பற்றிய பின்னர் பிறந்து வளர்ந்த புதியதலைமுறை வாலிபர் ஆவார். அவரது வயதை ஒத்த ஏனைய பலரைப் போன்றே தலிபான் இயக்கத்தின் கொடுமைகளை தனது பெற்றோர் மூலமாகவே தெரிந்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

காபூலில் உள்ள பிரபல பிரெஞ்சு மொழி கல்லூரி ஒன்றின் மாணவராகிய ஷாகி அன்வாரி ஒரு சமூக ஊடக நட்சத்திரமாகவும் விளங்கினார். தனது கடைசிப் பதிவு ஒன்றில் அவர் பின்வருமாறு எழுதிஉள்ளார் என்ற தகவலை ஊடகம் ஒன்றுவெளியிட்டுள்ளது. “உங்கள் வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டுபவர் நீங்களே… தூரிகையைப் பிறர் கையில் கொடுத்து விடாதீர்கள்…”(You’re the painter of your life. Don’t give the paint brush to anyone else!’)

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More