Home உலகம் கொரோனா”உயிரியல் ஆயுதமல்ல” என்கிறது அமெரிக்க உளவுத்துறை

கொரோனா”உயிரியல் ஆயுதமல்ல” என்கிறது அமெரிக்க உளவுத்துறை

by admin

கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை, அது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட வும் இல்லை.(genetically engineered).-இவ்வாறு தாங்கள் நம்புகின்றனர் என்பதை அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையினர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருக்கின்றனர்.

வைரஸ் இயற்கையாகத் தோன்றியதா ஆய்வு கூடத்தில் இருந்து வந்ததா என்ற சர்ச்சைகளுக்கு அறிக்கையில் எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. அதிபர் ஜோ பைடன் நியமித்த புலனாய்வுத் துறைக் குழுவே கொரோனா வைரஸ் தொடர்பான பரந்துபட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவின் உள் நாட்டு, வெளிநாட்டுப் புலனாய்வு சேவைகள் உட்பட அமைப்புகள் – சுமார் 90 நாட்களில் – நடத்திய விசாரணைகளின் பெறுபேறுகள்,கொரோனா வைரஸின் பூர்வீகம் தொடர்பில் தெளிவான – உறுதியான – முடிவுக்குவர இயலவில்லை என்பதைக் காட்டுகின்றன.

உலகெங்கும் 4. 5 மில்லியன் உயிர்களைப் பறித்த கொரோனா வைரஸ் சீனாவின் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் பாய்ந்ததா என்பதை அறியும் நோக்கில் அமெரிக்கா இந்த உளவு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.ஆனால் விசாரணை முடிவுகள்அதைத் தெளிவாக்கவில்லை.

வைரஸின் மூலம் தொடர்பில் புலனாய்வுசேவைகள் இரண்டு விதமான குழப்பங்களையே வெளிப்படுத்தி உள்ளன. SARS-CoV-2 வைரஸ் இயற்கையாகவே பரவியதா அல்லது ஆய்வு கூட விபத்தினால் வந்ததா என்பதில் உளவு அமைப்புகளும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளன.ஆனால் ஒரு வழி முறையில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்குப்போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

சீன அதிகாரிகள் முதலாவது தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே வைரஸின் தோற்றம் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதை நம்புவதாகக் கூறும் அறிக்கை,விசாரணைகளில் ஓர் முன்னேற்றத்தை எட்டமுடியாத கையறு நிலைக்கு சீனாவே பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

அமெரிக்கப் புலனாய்வுத் துறைகளின் இந்த அறிக்கையை “அறிவியலுக்கு எதிரானது” என்று சீனா கண்டித்துள்ளது. வுஹானில் உள்ள அரச ஆய்வு கூடத்தில் மேலதிக சோதனைகளை நடத்துவதற்கு சீனா மறுத்துள்ளது. அங்கு ஆரம்பத்தில் தொற்றுக்குள்ளானவர்களது மருத்துவப்பரிசோதனை அறிக்கைகளையும் நோய்பின்னணிகளையும் சர்வதேச நிபுணர்கள் வந்து ஆய்வு செய்வதற்கும் அது மறுத்து வருகிறது.

காலம் விரயமாகிக் கொண்டிருப்பதால் வைரஸின் முதல் தொற்றுக்கள் தொடர்பான ஆய்வுகள் இனிமேல் உரிய பயனை அளிக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.கோவிட்- 19 வைரஸ் ஆய்வு கூடத்தில்இருந்து பரவியதா என்பது உட்பட சகல சாத்தியப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.28-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More