Home இலங்கை குருநகர் இளைஞன் படுகொலை – பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் சரண்

குருநகர் இளைஞன் படுகொலை – பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் சரண்

by admin

  குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய முதன்மை சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்றைய தினம்  யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.  குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெரன் (வயது-24) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த  போது , மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.  
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினா் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்களான பாசையூர் ரெமியின் சகோதர்களைத் தேடி தீவகம் உள்பட பல இடங்களில் தேடுதல் நடத்தினர். அந்நிலையில் 9 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் உள்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 


எனினும் முதன்மை சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று காவல்துறையினா் குறிப்பிட்டனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.


இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கொல்லப்பட்டவருக்கும்,  தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்தன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More