Home இலங்கை ஜனாதிபதி, அமைச்சரவை நாடாளுமன்றிற்கு பொறுப்புகூறும் முறைமையை ஏற்படுத்தவேண்டும்!

ஜனாதிபதி, அமைச்சரவை நாடாளுமன்றிற்கு பொறுப்புகூறும் முறைமையை ஏற்படுத்தவேண்டும்!

by admin

இளைஞர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களின் உதவியுடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி மற்றும் கண்காணிப்பு 15 குழுக்கள் முக்கியமானது. அத்துடன், ஜனாதிபதி, அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கு பொறுப்புகூறும் முறைமையை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

நாட்டு மக்களுக்கு இன்று (29) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஏன்? தேவைப்படுகின்றது என்பது குறித்தும் விளக்கினார்.

இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19ஆவது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் எப்போதும் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் நாம் பின்பற்றக்கூடிய உதாரணங்கள் சில உள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931 முதல் 1947 வரை அரசியலமைப்பு சபை இருந்தது . அந்த சபையானது குழு முறையைப் பின்பற்றிச் செயற்பட்டது. ஒவ்வொரு விடயமும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டது. குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்கள் ஆனார்கள். ஏழு அமைச்சர்கள் ஒரு அமைச்சரவையை அமைத்தனர். மேலும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் இருந்தனர்.

மேலும், பொதுப் பணத்தைக் கட்டுப்படுத்த கணக்குக் குழுவும் இருந்தது. அந்த நேரத்தில் இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, நாடாளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள நாடாளுமன்ற முறை அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் முறை மற்றும் அரசயலமைப்பு முறை ஆகியவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம்.

முதலாவதாக, நாணய அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் நாடாளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிகிறோம்.

தற்போது அரசாங்க நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன. பொது நிதிக் குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும். இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார்.

மேலதிகமாக அஅதற்கு. , நாங்களும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம். பண விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம். இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலை. பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன.

எங்களின் நிலையியற் கட்டளை 111ன் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும். இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஐந்து நிதிக் குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை.

எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

தற்போதுள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் அறிய விரும்புகிறார்கள். எனவே, இந்த 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிகிறேன்.

அவர்களில் ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

தேசிய கவுன்சிலையும் நாங்கள் முன்மொழிகிறோம். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது.

தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம். அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம். இந்நாட்டின் பாராளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம். அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம்.

அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய கவுன்சிலுக்கு உரிமை உண்டு.

நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர்களின் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். தேசிய கவுன்சிலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விஷயங்களை மேற்பார்வையிடவும் ஒரு அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More