இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையால் கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடித் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த 3ம் திகதி கைது செய்தனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கடந்த ஒரு மாத காலத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை சிறைகளில் 97 மீனவர்கள் உள்ளனர். அதோடு, அவர்களின் 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.