Home இலங்கை தமிழக முகாம்களிலுள்ள 58,104 ஈழ அகதிகளை அழைத்துவர முயற்சி!

தமிழக முகாம்களிலுள்ள 58,104 ஈழ அகதிகளை அழைத்துவர முயற்சி!

by admin

 

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை  விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

அதன் போது, ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார்.

இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர்.

தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.

மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது.

கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More