204
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கபட்டு வரும் நாளாக உலக நாடக நாள் இவ்வருடமும் இடம்பெறவுள்ளது.நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் தலைமையில் நுண்கலைத்துறைப் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைவில் நாளை(27.03.2024) கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நவீன அறிவுச் சூழலில் உள்ளூர்க் கலைமரபுகள் அழிந்துவிட்டன, அருகிவிட்டன எனும் புணைவு கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சூழலில் உள்ளூர்க் கலைகளிற்கான தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் காணக்கூடியதாகவுள்ளது. அதற்கு அந்தந்த பிரதேசம் சார்ந்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து நகரமைய சூழல்களிலும் அவற்றினை கொண்டு சேர்க்கும் கலைஞர்களான கலாபூக்ஷணம் பராசக்தி ஜெகன்நாதன், திருமதி சிவகாமிதேவி முரகமூர்த்தி ஆகியோரை மாண்பு செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் த.பிரபாகரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்களும், கௌரவ அதிதியாக மேனாள் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி திரு பால சுகுமார் அவர்களும், அதிதி கலைஞராக கொட்டகலை ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் திரு ஜெ.சங்குருநாதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் எழுத்து, நெறியாள்கையில் தயவு செய்து சத்தம் போடாதீர்! அல்லது இது என்ன சந்தையா? நாடகம் 2021/2022 மாணவர்களால் ஆற்றுகை செய்யப்படவுள்ளது. மேலும் 2019/2020 ஆம் ஆண்டு மாணவர்களின் சிலம்பம் – அலங்கார வீச்சு ஆற்றுகையும், 2020/2021 ஆம் ஆண்டு மாணவர்களால் போர்ப்பறவை அபிநய நாடகமும் ஆற்றுகை, நுண்கலைத்துறை மாணவர்களின் பாடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து கலை நிலா கலையகம், வவுனியா அரங்காலயா ஆற்றுகைக் குழுவின் பன்றிப்பள்ளு ஆற்றுகையும், பலாச்சோலை பாரதி கலாமன்றத்தினரால் பாலிப்போடி கமலநாதன் அண்ணாவியார் தலைமையில் புலிக்கூத்து ஆற்றுகையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love