மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது.
இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது நகரில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அந்நாட்டு வைத்தியசாலையில் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை நிகழ்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இன்று காலை வரை மியன்மாரில் 14 நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று (29.03.25) அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.