இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.
கலந்துரையாடலில் பின் அமைச்சரின் ஊடக பிரிவு, ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்திய மீனவர்கள் உணர்ந்தனர் என்பதை அறியமுடிந்தது
எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.