Home இலங்கைவட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை

வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை

by admin

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கமலேந்திரனை கொலை செய்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ரெக்சியனின் மனைவி ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத சந்தர்ப்பத்தில், சட்ட மா அதிபர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாடடை முன்வைத்து  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமல் என்று அழைக்கப்படும் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவி  அனிதா ரெக்சியன் ஆகிய இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் டானியல் ரெக்சியன் கமலேந்திரன் என்பவரை கொலை  செய்ததன் ஊடாக தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக இருவருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத்  தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அறியமுடிகிறது.
பின்னணி
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் என்பவர் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.  இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான  கமல் என்று அழைக்கப்படும் கந்தசாமி கமலேந்திரன்,  ஒரு வாரத்தின் பின் கொழும்பில் வைத்து   குற்ற புலனாய்வு  பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், டானியல் ரெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.   இந்த நிலையில் கமலேந்திரன் மற்றும் ரெக்சியனுடைய மனைவி ஆகிய இருவரும் கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் டானியல் ரெக்சியன் கமலேந்திரன் கொலை தொடர்பில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக சட்ட மா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
#நெடுந்தீவு #வட மாகாண சபை #எதிர்க்கட்சித் தலைவர் #மனைவி  #குற்றப்பத்திரிகை #ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More