Home உலகம்ஜேர்மனி, நெதர்லாந்து உட்படபத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா’ இடைநிறுத்தம்!

ஜேர்மனி, நெதர்லாந்து உட்படபத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா’ இடைநிறுத்தம்!

by admin

பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனையைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.

நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை இடைநிறுத்துவதாக இன்று அறிவித் துள்ளது. நோர்வே, டென்மார்க், ஐரிஷ் குடியரசு, பல்கேரியா ஆகியன ஏற்கனவே தமது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதை சிறிது காலம் இடைநிறுத்தி உள்ளன.

இத்தாலி, ஒஸ்ரியா போன்ற நாடுகள் அஸ்ராஸெனகா தடுப்பூசியின் ஒரு குறிக்கப்பட்ட தயாரிப்புகளின் பாவனையை மட்டும் நிறுத்தி வைத் துள்ளன.

இந்தோனேசியா, தாய்லாந்துஆகியனவும் அஸ்ராஸெனகா ஊசி ஏற்றுவதை தள்ளிப்போட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றியோரில் அரிதாக மிகச் சிலரில் இரத்தம் உறைதல்(blood clot) தோலில் இரத்தக் கசிவு போன்ற பக்க விளைவுகள் வெளிப்பட்டதை அடுத்தே நாடுகள் பலவும் அஸ்ராஸெனகா தடுப்பூசியை இடைநிறுத்தி வருகின்றன.

ஜரோப்பாவிலும் ஐக்கிய ராஜ்ஜியத்திலும் இதுவரை 17 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும், அவர்களில் ஆக நாற்பது பேர் மட்டுமே பக்க விளைவுகளைச் சந்தித்துள்ளனர் எனவும் அஸ்ராஸெனகா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தம் உறைதலுக்கும் தடுப்பூசி மருந்துக்கும் தொடர்பு இருப்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ‘அஸ்ராஸெனகா’ தடுப்பூசிப் பாவனையை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பிரான்ஸில் ‘ஒக்ஸ்போட்’ தயாரிப்பான அஸ்ராஸெனகா தடுப்பூசி அனுமதிக்கப்பட்ட ஐந்து கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றாகப் பாவனையில் இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதா என்ற தீர்மானத்தை அடுத்த 24 மணிநேரத்தில் பிரான்ஸின் சுகாதார அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர். #ஜேர்மனி #நெதர்லாந்து #அஸ்ராஸெனகா #இடைநிறுத்தம் #பக்கவிளைவுகள் #கொரோனா

—————————————————————-

குமாரதாஸன். பாரிஸ்.15-03-2021

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More