Home இலங்கை “தவறை ஏற்கிறோம் வெட்கப்படவில்லை – எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயார்!

“தவறை ஏற்கிறோம் வெட்கப்படவில்லை – எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயார்!

by admin

” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டம் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இன்று (16.10.22) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ச,

” எமது கட்சியை வெற்றிபெற வைப்பதற்கு மஹிந்தானந்த அளுத்கமகேயும், நாவலப்பிட்டிய தொகுதி மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இன்றும் மஹிந்தானந்த தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றார். மக்களும் அவர் பின்னால் நிற்கின்றனர். அந்த சக்திதான் எமது கட்சியின் பலமாகும்.

நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது. அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.

சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக்கொண்டு, சுமைகளை எம்மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என பந்தாடியும் எம்மை பந்தாடியும் வருகின்றனர். மறுபுறத்தில் சேறுபூசும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முற்படுபவர்களும் தவறுகளை இழைத்துள்ளனர். தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக்கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.

பொது வேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரசக் கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும். ” – என மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் என்கிறார் மஹிந்தானந்த!

” எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும் என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியால் நாவலப்பிட்டிய நகரில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் 148 பேர் மாத்திரமே பங்கேற்றனர் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16.10.22) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண் உரையாற்றிய அவர், ” இன்று நடைபெறும் கூட்டம் மாவட்டக் கூட்டம் அல்ல, ஒரு தொகுதி கூட்டமாகும். ஆனாலும் மக்கள் அணி திரண்டுள்ளனர். தாங்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் நிற்கின்றோம் என்ற தகவலை அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு சிலர் எம்மைவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் சக்தி பலமாகவே உள்ளது.

நாவலப்பிட்டியவில் நடைபெறும் கூட்டத்தை குழப்ப வேண்டும், மக்களின் வருகையை தடுக்க வேண்டும் என்பதற்காக நாவலப்பிட்டியவில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துமாறு தொகுதி அமைப்பாளருக்கு ஆணையிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 148 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கண்டியில் இருந்தும் ஆட்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல. எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். கண்டி மாவட்டமும், நாவலப்பிட்டிய தொகுதியும் தயார் என்ற செய்தி இக்கூட்டம் மூலம் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. சவால்களை ஜனாதிபதி சிறப்பாக எதிர்கொள்கின்றார். அடுத்த இரு வருடங்களுக்கு அவருக்கு ஆதரவு வழங்கப்படும். தவறுகளை திருத்திக்கொண்டு எமது கட்சி வெற்றிநடைபோடும்.” – எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More