ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (8/2/2025) காலையில் ஏறாவூர் காவல் நிலையத்துக்கு அருகில் வைத்து ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் எமது செய்திளாரிடம் தெரிவிக்கையில்,
அரசியல் பிரச்சினை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னால் எனது தந்தை மற்றும் சகோதரர் மீது இன்று அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் நடத்தினார். இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்ற போது , ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.
இதனையடுத்து நான் காவல் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள்ள சென்ற போது, பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன், காவல் நிலையத்துக்குள் வைத்தும் தாக்க முற்பட்டபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர் என்றார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் முரண்பட்டு கொண்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

