நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை அரசே இல்லாதொழித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியிள் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு செல்கிறது. அங்கிருந்து தான் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. இதை இலஞ்சம் என்றே குறிப்பிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(7/2/2025) இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த விவாதத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்துக் கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள். கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளைப் படித்துப் பாருங்கள்.
ஆகவே கொண்டு வரும் புதிய சட்டமூலம் கடந்த காலத்துக்கு செல்வாக்கு செலுத்தாது. அதுபோல் தற்போதுள்ள ஆளும் தரப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவர்களும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளைப் பெறுவார்கள். ஆகவே புதிய சட்டமூலத்துக்குக் கைகளை மாத்திரமல்ல, இரண்டு கால்களை உயர்த்தி ஆதரவு வழங்கினாலும் ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனத் தொிவித்தாா்.

