கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18/02/2025) கடுவெலவில் உள்ள தங்ககத்தில் தங்குவதற்காக சென்றதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்தத் தங்ககத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவிலிருந்து இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கொலை நடந்ததற்கு முந்தைய நாள் (18/02/2025) மாலை மகிழுந்தில் தங்ககத்திற்கு சென்ற அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், மறுநாள் மஹரகம பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே இரவில், மற்றொரு மகிழுந்தில் வந்த ஒருவர் தங்ககத்திற்கு முன்னால் வந்து அந்தப் பெண்ணிடம் ஒரு பையைக் கொடுத்ததாகவும், இதில், துப்பாக்கி அடங்கிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்த சட்டப் புத்தகம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

