பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை “ஸ்கைப்” காணொளி அழைப்பு ஊடாக மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மனுதாரர்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் சுஜீவ நிஷங்க முன்னிலையில் வியாழக்கிழமை (27/02/2025) அழைக்கப்பட்ட போது, “ஹரக் கட்டா” நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, “ஹரக் கட்டா” தனது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை “ஸ்கைப்” காணொளி அழைப்பு ஊடாக மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதனைக் கருத்திற்கொண்ட நீதவான், “ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை “ஸ்கைப்” காணொளி ஊடாக மேற்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மனுதாரர்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.