இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்துக்கு போத்தல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்காக ஜம்மு காஷ்மீரில் 25.75 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியதாக ஜம்மு காஷ்மீாின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் முதல்வர் ஓமர் அப்துல்லா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற முத்தையா முரளிதரன் தற்போது போது வணிகராக மாறி இலங்கையில் சிலோன் பீவெர்ஜ் எனும் குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த வணிகத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்தும் பணியில் முத்தையா முரளிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிலையில் தான் தற்போது முத்தையா முரளிதரன் நிறுவனத்தால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்குத் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன் நடத்தி வரும் சிலோன் பீவெர்ஜ் நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் குளிர்பானம் மற்றும் அலுமினிய கான் தயாரிப்பு ஆலை என்பது ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரனின் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசுதான் வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்தக் கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

