Home உலகம்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் வான்வழித் தாக்குதலில் பலி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் வான்வழித் தாக்குதலில் பலி!

by admin

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

நாட்டின் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்திகா மாகாணத்தில் உள்ள உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.

“உர்குனில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்கள் ஒன்று கூடல் ஒன்றின் போது குறிவைக்கப்பட்டனர்” என்று தெரிவித்த ACB, அதனை “பாகிஸ்தான் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்” என்று விபரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, கொல்லப்பட்ட மூன்று வீரர்களையும் கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah) மற்றும் ஹாரூன் (Haroon) எனப் பெயரிட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கவில்லை.”பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்”, அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லஹோரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

மேலும், “ஆப்கானிஸ்தானின் விளையாட்டு சமூகம், அதன் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்திற்கு இது ஒரு பெரிய இழப்பாகக் கருதுவதாகவும்”, “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஒற்றுமையையும்” தெரிவித்துக் கொள்வதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

“இந்த ஒடுக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் எமது உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத குற்றம்,” என்று ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் பஸல்ஹக் ஃபாரூக்கி (Fazalhaq Farooqi) பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு சர்வதேச வீரரான முகமது நபி (Mohammad Nabi), “இந்தச் சம்பவம் பக்திகாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்திற்கும், தேசத்திற்கும் ஏற்பட்ட துயரம்” என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் (Rashid Khan) இந்த முடிவை வரவேற்று, “இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானின் தேசிய கௌரவத்தை முன்னிறுத்தி நிற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More