மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் புலிகளின் தலைவது 71வது பிறந்தநாள் இன்றைய தினம் புதன்கிழமையும் மா*வீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவற்துறையினரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் அதற்கான அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வல்வெட்டித்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்றவும் வல்வெட்டித்துறை காவற்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த பதாகையில் உள்ள பாதணி புலிகளினை உருவகப்படுத்துவதாக சுட்டிக்காட்டி அது தொடர்பிலும் சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.11.25) மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு சென்ற தெல்லிப்பழை காவற்துறையினர் குறித்த ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று அவற்றை சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.
மா*வீரர் நாள் நாளை வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவற்துறையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை , ஆட்சி மாறினாலும் பழையவாறே அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள் தொடர்கின்றன என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டியில் மாவீரர் நினைவாலயம்!

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செய்தார்.

