Home இலங்கைகிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்!

கிளிநொச்சியில் பரபரப்பு: அதிபரின் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகம் வீதியில்!

by admin

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மாசார் அ.த.க பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலை சமூகத்தினால் இன்று புதன்கிழமை (17) காலை 7.30 மணியளவில் பாரிய அமைதி வழி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கான முக்கிய காரணங்கள்:

  • நிதி முறைகேடுகள்: பாடசாலை கணக்கறிக்கைகளில் முறைகேடு மற்றும் பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளில் ஊழல்.

  • தன்னிச்சையான முடிவுகள்: பாடசாலை சமூகத்தைப் புறக்கணித்து அதிபர் தன்னிச்சையாகச் செயற்படுதல்.

  • மாணவர் பாதிப்பு: தனிப்பட்ட பகையை மனதில் வைத்து மாணவர்களைப் புறக்கணித்தல்.

நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு:

இவ் ஊழல்கள் குறித்து பளை கோட்டக்கல்வி பணிமனை, வலய மற்றும் மாகாண கல்வித் திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும், பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசியல் தலையீடு குறித்த குற்றச்சாட்டு:

தற்போதைய ஆளும் கட்சியின் பிரமுகர்கள் சிலருக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் வெளியிட்டுள்ள பாடசாலை சமூகம், தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கை: “இன்னும் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், பாடசாலையை முடக்கி பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” எனப் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.

#Kilinochchi #Pachilaipalli #EducationCrisis #JusticeForStudents #SchoolProtest #NPP #SriLanka #CorruptionFreeEducation #MasaarSchool #கிளிநொச்சி #பச்சிலைப்பள்ளி #கல்வி #ஆர்ப்பாட்டம் #ஊழல் #தேசியமக்கள்சக்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More