182
தைவான் நாட்டின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (டிசம்பர் 27, 2025) சனிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தைவானின் இலான் (Yilan) மாவட்டத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 11:05 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் சுமார் 73 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது. (அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதை 6.6 என முதலில் குறிப்பிட்டிருந்தது).
இந்த நிலநடுக்கத்தினால் தலைநகர் தைபே உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையாகக் குலுங்கியதுடன் இலான் பகுதியில் சுமார் 3,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன் தற்போதைய தகவல்படி பாரிய உயிர்ச்சேதங்களோ அல்லது கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களோ பதிவாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் எரிவாயு மற்றும் தண்ணீர் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான TSMC, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு ஹ்சின்சு (Hsinchu) பூங்காவில் உள்ள சில பிரிவுகளில் இருந்து ஊழியர்களை வெளியேற்றியது. எனினும் நிலைமை சீரானதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இதேவேளை அடுத்த 24 மணிநேரத்தில் 5.5 முதல் 6.0 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் (Aftershocks) ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Spread the love

