161
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட் (Happiness Institute) மற்றும் அரசுக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சரின் மகன் இன்று (டிசம்பர் 30) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட்டிற்குச் சொந்தமான லொறி மற்றும் பல வாகனங்களை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் பயன்படுத்தியதுடன் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமான முறையில் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் அவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்ததன் அடிப்படையிலேயே இன்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜொஹான் பெர்னாண்டோ, இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இவர் மட்டுமன்றி, இந்த வாகன முறைகேடு மற்றும் முறையற்ற நிதிப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகள் மற்றும் ஹேப்பினஸ் இன்ஸ்டிடியூட் ஊழியர்களிடமும் CID விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இலக்கத் தகடு இல்லாத வாகனங்களை வைத்திருந்தது மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகள் தீவிரமடைந்து வருகின்றன.
அரசாங்கத்தின் தரப்பில் இருந்து, “அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

