காணி உரிமையாளர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் ஜனவரி 3-ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை அடுத்து, விகாராதிபதி இன்று ஊடகங்களைச் சந்தித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
விகாரை தொடர்பான காணிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் வரை, விகாரை வளாகத்திற்குள் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 3-ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழமையான பூஜைகள் மட்டுமே நடைபெறும். தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டு வரப்படுவதாகவோ அல்லது விசேட பெரஹரா (ஊர்வலம்) நடத்தப்படுவதாகவோ பரவும் செய்திகளில் உண்மையில்லை எனவும், அதற்குத் தான் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் காணி விவகாரத்தை ஆராய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய குழுவிடம் விகாரை சார்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காணி உரிமையாளர்களும் ஆவணங்களை வழங்கியுள்ளனர்.
இது சட்டவிரோதமானது என விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டால், அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என விகாராதிபதி தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விகாராதிபதியின் இந்த அறிவிப்பு, ஜனவரி 3-ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த காணி உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஒருவிதமான சமரசப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அரசாங்கக் குழுவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதே இப்போது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Tag Words: #Taiyitti #ViharaControversy #JaffnaNews #Nandaramathero #LandDispute #PeaceTalks #SriLankaPolitics #FactCheck #TamilNews #JusticeUpdate

