Home இலங்கைவடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார்

வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார்

by admin
வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர் துணையாக செயற்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு , வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயார் என உறுதி அளித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
தூதுவரிடம் கடற்தொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் மீது வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்படுகிறது.
போருக்குப் பிந்தைய மீட்சி அரசியலை வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், செயற்பாடுகளாக மாற்றும் உறுதியான அரசியல் தீர்மானங்களே இன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்குப் பின்னணி
குறிப்பாக மீன்வளம், கடற்றொழில், நீரியல் வளங்கள் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன
மேலும், வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் வெறும் முதலீட்டுக்கான நிலங்களாக மட்டுமல்லாது, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார சமநிலையை உருவாக்கும் திட்டங்களாக அமையும்.
இந்த முதலீட்டு முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் அவசியம்.குறிப்பாக அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டும். அவுஸ்திரேலியாவில் எமது புலம்பெயர் உறவினர்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்களின் பங்களிப்பையும் பெற்றுதருவதற்குரிய துணையாக தூதுவர் செயல்பட வேண்டும்.
அதேபோல், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய்நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும்
வெளிநாட்டு இலங்கையர்களின் முதலீடுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், தேசிய நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் முக்கிய சக்தியாக அமையும்
கடந்த காலங்களைப் போல அல்லாமல், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இலங்கையில் பாதுகாப்பு உத்தரவாதம் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, புலம்பெயர் தமிழர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எந்தவிதத் தயக்கமுமின்றி இலங்கைக்கு வரவும், முதலீடுகளில் ஈடுபடவும் முழுமையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது
தெற்கில் எவ்வாறு இனவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றனவோ, அதேபோன்று வடக்கிலும் சில இனவாத சக்திகள் செயற்படுகின்றன. இச்சக்திகள் மக்களின் உண்மையான தேவைகளைப் புறக்கணித்து, அபிவிருத்தி பணிகளை தடைசெய்யும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் முகமாக அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவிக்கையில்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துவருவது தெளிவாகப் பிரதிபலிக்கிறது. வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் இந்நிர்வாக முறை, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயார்.
குறிப்பாக, வடக்கில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார மேம்பாடு தொடர்பில் ஆழமாக ஆராயப்படும் என்றாா்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More