வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர்க் (Wiebe de Boer) இடையிலான சந்திப்பு, வடக்கின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சுற்றுலா முதல் சுகாதாரம் வரையிலான பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சந்திப்பின் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நெடுந்தீவு இறங்குதுறையை நெதர்லாந்து அரசின் உதவியுடன் நவீனப்படுத்த ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் நெதர்லாந்து நிதியுதவியுடன் ஏற்கனவே புனரமைக்கப்பட்ட கோட்டையை, உலக வங்கியின் புதிய திட்டங்கள் மூலம் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நெதர்லாந்து உதவியுடன் கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட 4 மருத்துவமனைகளை முழுமையாக இயங்கச் செய்வதில் உள்ள சவால்கள் (ஆளணி மற்றும் தொழில்நுட்ப வசதிகள்) குறித்துத் தூதுவர் கேட்டறிந்தார்.
விவசாயம் மற்றும் மீன்பிடிப் பொருட்களை மூலப்பொருட்களாக மட்டும் அனுப்பாமல், அவற்றை வடக்கிலேயே தொழிற்சாலைகள் மூலம் முடிவுப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்ய நெதர்லாந்து முதலீட்டாளர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா் .
பனைசார் உற்பத்திகள் மற்றும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் புத்தாக்க ‘வைன்’ உற்பத்தியின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்துத் தூதுவரின் கவனம் ஈர்க்கப்பட்டது.
டித்வா புயல் பாதிப்புகள், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாகப் பேசப்பட்டது.
காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்த ஜனாதிபதியின் அண்மைய வாக்குறுதிகள் வடக்கின் வளர்ச்சிக்குச் சாதகமானது எனத் தூதுவர் பாராட்டினார்.

Tag Words: #NetherlandsInSri Lanka #NorthernGovernor #NeduntheevuJetty #JaffnaFort #AgriExports #JaffnaPalmWine #KKSDevelopment #LankaNews2026 #EconomicPartnership

