மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் சிகிச்சைகளின் பின்னர் நலமடைந்து தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளதாக வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவருடன் தான் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடி அவர்களின் நலன்களை விசாரித்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், அவர்கள் அனைவரும் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நான்காவது நபரைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், அவரும் பாதுகாப்பாக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்குத் தற்போதைய அரசாங்கம் அதியுயர் முன்னுரிமை அளிப்பதாகவும், அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள இலங்கையர்களின் நிலைமைகளைத் தூதரகங்கள் ஊடாகத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

