வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் புதிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள், பிரதேச விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் கேள்வி கோரல்கள் (tenders) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து அடுத்த ஆண்டுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த உள்ளக விளையாட்டரங்கில் மேசைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் (Badminton) மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான திடல்கள் அமைக்கப்படவுள்ளன. அதோடு கரம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒரே நேரத்தில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணக்கூடிய பார்வையாளர் இருக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இதனுடன் இணைந்து சிறுவர் பூங்கா மற்றும் நீச்சல் பயிற்சிக்கான நீச்சல் தடாகமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

