158
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, யூதர்களின் பஸ்கா பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாக ஆற்றிய உரையில், தனது எதிரிகளுக்கு எதிராக இஸ்ரேல் “பத்து பேரிடர்களை” (Ten Plagues) கட்டவிழ்த்து விட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பத்து பேரிடர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை அவர் இவ்வாறு உருவகப்படுத்தியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூதிகள், மேற்குக் கரையில் உள்ள போராளிக் குழுக்கள் மற்றும் சிரியாவில் பஷார் அல்-அசாத்திற்கு விசுவாசமான படைகள் ஆகிய ஐந்து பிராந்திய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணை கட்டமைப்புகள், தலைமைத்துவ வலைப்பின்னல்கள், உள்நாட்டு பாதுகாப்பு எந்திரம் மற்றும் சிரேஷ்ட தளபதிகள் ஆகிய ஐந்து முக்கிய இலக்குகளைச் சிதைப்பதன் மூலம் ஈரானுக்கு நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் இராணுவ வியூகங்களை மத அடையாளங்களோடு இணைத்துப் பேசுவது நெதன்யாகுவின் ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
போர்க்காலத்தில் உள்நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டவும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு தார்மீக நியாயத்தை வழங்கவும் இத்தகைய விவிலியக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய கருத்துக்கள் பிராந்திய ரீதியாகப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Spread the love

