167
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு (Pentagon) வத்திக்கான் அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கு விடுத்த கோரிக்கை “முன்னெப்போதும் இல்லாத ஒன்று” (Unprecedented) என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்ததில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் ஈரானுடனான போர் குறித்த பாப்பரசர் 14 ஆம் லியோவின் (Pope Leo XIV) விமர்சனங்களைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் கொள்கைக்கான துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி, வத்திக்கானின் தூதரான கர்தினால் கிறிஸ்டோப் பியரை பென்டகனுக்கு நேரில் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, அமெரிக்காவின் இராணுவக் கொள்கைகளை வத்திக்கான் ஆதரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், பென்டகன் தரப்பில் இந்தச் சந்திப்பை “மரியாதைக்குரிய மற்றும் நியாயமான விவாதம்” என விவரித்துள்ளதுடன், வெளிவந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் “டன்ரோ கோட்பாடு” (Donroe Doctrine) மற்றும் போர் நடவடிக்கைகளை பாப்பரசர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக, பாப்பரசர் 14 ஆம் லியோ இந்த ஆண்டில் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தைத் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக அமைதி மற்றும் மனிதநேயம் குறித்துப் பேசும் வத்திக்கான் அதிகாரிகளை, அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது உலக அரசியலில் ஒரு முக்கியமான மற்றும் அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love

