தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் (Vote of Confidence), முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமோக வெற்றி பெற்று தனது ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. பதவியேற்ற கையோடு அறிவிக்கப்பட்ட அதிரடித் திட்டங்களுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு, சட்டமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
தமிழக சட்டசபையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, விஜய் அரசு தனது பலத்தை நிரூபித்துள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மற்றும் எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் விஜய் அரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
சபாநாயகர் முறையான வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தனது நன்றியுரையை ஆற்றிய முதலமைச்சர் விஜய்: “இது தனிமனிதனின் வெற்றியல்ல, மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களின் வெற்றி” எனத் தெரிவித்தார். “இனிவரும் காலங்களில் வார்த்தைகளை விட எமது செயல்களே அதிகம் பேசும். தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் முறையாக நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார். சட்டமன்றத்தில் கண்ணியமான முறையில் விவாதங்களை முன்னெடுக்கவும், எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகும். ஆட்சிக்கு ஆபத்து ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம், இனிவரும் நாட்களில் அவர் அறிவித்த ‘சிங்கப் பெண் அதிரடிப்படை’ மற்றும் ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த முடியும். ஒரு நடிகராகப் புகழின் உச்சத்தில் இருந்த விஜய், தற்போது ஒரு நிர்வாகியாகத் தன்னை நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார். சட்டமன்றத்தில் அவர் காட்டிய நிதானமும், பெரும்பான்மையை நிரூபித்த வேகமும் அவரது முதிர்ச்சியான அரசியலைக் காட்டுகிறது.
#TVK_Victory #CMVijay #TN_Assembly #VoteOfConfidence #NewEraInTN

