Home இலங்கைஆயுதம் தொடர்பில் எதுவும் தெரியாது

ஆயுதம் தொடர்பில் எதுவும் தெரியாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் எவ்வாறு ஆயுதங்கள் வந்தன என்பது தொடர்பில் சந்தேக நபருக்கு தெரியாது எனவும் , அது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயை சேர்ந்த சிவகுமார் (வயது 55) எனும் நபர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அண்மையில் அடாத்தாக தங்கியிருந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அதனை தொடர்ந்து வீட்டில் அடாத்தாக குடியேறியிருந்த நபர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

அந்நிலையில் குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளபட்டது.

அதன் போது சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , குறித்த வீட்டில் சந்தேகநபர் தங்கியிருந்தது உண்மை ஆனால் எவ்வாறு அந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் வந்தன என்பது பற்றி சந்தேகநபருக்கு எதுவும் தெரியாது.

ஆயுதங்கள் எங்கே இருந்து வந்தன என்பது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அன்றைய திகதி வரையில் சந்தேக நபரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More