Home இலங்கைஇனப்படுகொலைக்கான சர்வதேச நீதியை கோரும் 3 விடயங்கள், கொள்கைரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது…

இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியை கோரும் 3 விடயங்கள், கொள்கைரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியை கோரும் வகையில் 3 விடயங்களை முன்வைத்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரணை சபையில் கொள்கைரீதியாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 130வது கூட்டம் இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார்.

அந்த பிரேரணையில் இலங்கை அரசை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுதல், இலங்கை மீது இராணுவ தடைகளை விதித்தல், வடகிழக்கு மாகாணங்களில் ஐ.நா கண்காணிப்புடன் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துதல் போன்ற கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சபையில் கருத்து தெரிவிக்கையில் குறித்த பிரேரணையானது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது ஒன்று ஆனால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அதனை அனுப்புகின்றபோது முறைப்பாடியான ஆவணமாக அதற்கேற்ப மொழிநடையில் மாற்றம் செய்யவேண்டும் இதற்கு குழு ஒன்றினை அமைத்து அதற்கேற்ப அனுப்புவதுதான் முறைப்படியாக இருக்கும் என தனது கருத்தைத் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரேரணையை முன்வைத்த எம்.கே.சிவாஜிலிங்கம் , அவைத்தலைவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கு செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், தவராசா, அஸ்மின், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகியோரைக் கொண்டு அவைத்தலைவர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

குறித்த குழுவானது இரண்டு ஒரு தினங்களில் கூடி முறைப்படியான தீர்மானத்தை அடுத்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை இதன்போது கருத்துத் தெரிவித்தமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முக்கியமான பல தீர்மானங்களை சபைக்கு கொண்டு வந்தபோதும் அதனை பிறிதொரு நாளுக்கு எடுப்போம் எனக்கூறி சிவாஜிலிங்கம் கொண்டு வராதமாதிரி வேறு சிலர் அதே பிரேரணைகளை கொண்டு வந்து நிறைவேற்றிய சம்பவங்களும் இந்த சபையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இந்தப் பிரேரணை சிவாஜிலிங்கம் கொண்டு வந்ததாகவே இருக்கவேண்டும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More