நீட் பரீட்சைக்கு எதிராக தமிழகத்தின் சென்னையில் அரச பாடசாலை மாணவிகள் இன்று திடீரென வீதி மறியல் போராட்டத்தில் குதித்தனர். உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மாணவிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதால் அங்கு அசாதாரண நிலமை ஏற்பட்டது.
நீட் பரீட்சையால் மருத்துவராகும் கனவை இழந்த தமிழக மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதனையடுத்து, நீட் பரீட்சைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வெடித்தது. தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்தலாம் என்றும் அதே நேரத்தில் வீதி மறியல், கடையடைப்பு உள்ளிட்டவற்றை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பாடசாலையில் மாணவிகள் இன்று மகாலிங்கபுரத்தில் திடீரென வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைக் காவல்துறையினர் மற்றும் ஆசிரியைகள் சமாதானப்படுத்தினர். அதையும் மீறி மாணவிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Spread the love
Add Comment