Home இலக்கியம் பேரலைகளிடையே, கனவுப் பொதி – மயூரன் கவிதைகள்

பேரலைகளிடையே, கனவுப் பொதி – மயூரன் கவிதைகள்

by editortamil
 
கனவுப் பொதி
யாரும் கொண்டிராத கனவுப் பொதிக்கு
சொந்தக்காரர்கள்
நிகரற்ற தியாகத்தாலும்
விண்துளைத்த வீரத்தாலும்
உதிரத்தாலும் சிதைகளாலுமானது
அக்கனவுப் பொதி
பிரித்துப்பார்க்க எண்ணினேன்
முடியவில்லை
பிரித்துப்பார்க்கும் அருகதை எனக்கில்லை
அடி நெஞ்சில் மூண்ட தீயிலும்
ஆழியின் ஆழத்தை விஞ்சிய அர்ப்பணிப்பிலும்
உருப்பெற்றதல்லவா அக்கனவுகள்
மரிக்காத சகா ஒருவரிடம்
இன்னதை கேட்டிருந்தேன்
உள்ளிருப்பதை கூறிச்சென்றார்
அக்கனவுகளில் அவர்களில்லை
பச்சை வயல் வரப்பில்
நானும் என் தோழர்களும்
பட்டம் ஏற்றுகிறோம்
யாருமற்ற பெருவெளியில்
நடு இரவில்
தோழிகள் இருவர் நட்சத்திரங்களை கணக்கிடுகிறார்கள்.
– மயூரன் –
14.05.2017

பேரலைகளிடையே

உடைக்கப்பட்ட படகொன்றின்
சிதைவு துண்டுகளில்
நானும் உறவுகளும்
தத்தளித்தபடி இருக்கிறோம்

படகோ மிகப்பெரியது
படகைத்தாக்கிய அலைகளோ
படகை விடப்பெரியது

படகோட்டிகள் பலரும் மாண்டுவிட்டதாக சேதி
ஆனால் விளித்திரைகளில்
வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்

கடந்துவிட்ட அலைகள்
ஏராளம்
பெரும் அலைகள் எழுமெனத்தெரிந்தும்
படகு நிறுத்தப்படவில்லை
அவர்களிடம் உறுதி நிறையவே இருந்தது

கடந்துவந்த பாதையில்
அலைகளை கடக்கவும் கற்றுத்தந்திருக்கிறார்கள்
படகொன்றை கட்டவும் கற்றுத்தந்திருக்கிறார்கள்

நெடுந்தூரம் வந்துவிட்டோம்
மீதமுள்ள அலைகளை
கடக்கத்தான் வேண்டும்
‘கட்டப்படுகிறது , கடந்துகொண்டிருக்கிறது’
என்பதெல்லாம் ‘பொய்க்கதை’

இதுவரை பயணித்தவர் நாங்கள்
எமக்குத்தான் கட்டத்தெரியும்
எமக்குத்தான் கடக்கவும் தெரியும்
பேரலைகளிடையே சிதைவுத்துண்டுகளில்
படுத்துறங்கிவிட முடியாது

– மயூரன் –
10.11.2017

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More