Home உலகம் லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி…

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி…

by editortamil

ஐரோப்பிய நாடுகளுகளில் குடியேறும் நோக்கத்தில் லிபியா நாட்டில் இருந்து புறப்பட்டு சென்ற படகு இன்று திரிபோலி அருகே கடலில் கவிழ்ந்த விபத்தில் 25 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற மீட்புப் படையினர் நடுக்கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பலரை மீட்டு திரிபோலி துறைமுகம் பகுதியில் தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிக்காக போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.

மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடி வரும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More