Home இலங்கை மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…

மாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…

by admin

அரசியலில் அ ஆவையே இப்போதுதான் படிக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்களை விமர்சிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறைசொல்லித் திரிகின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பும் உதவிப் பொருள் வழங்கலும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று (21.10.18) நடைபெற்ற போது  நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மக்களுக்கு உரிமை தான் வேண்டும். அபிவிருத்தி தேவையில்லை என்று சாரப்பட முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்வொன்றில் அண்மையில் பேசியுள்ளார். அவர் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் வடக்கு மாகாண சபையை நடத்திய லட்சணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அவரது நடத்தையால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்கின்றார்.

எங்கள் கட்சியில் போட்டியிட்டுதான் வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவானவர் இந்த விக்னேஸ்வரன். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒழித்துக் கட்டுவதில் வலு தீவிரமாக செயற்படுகிறார்.. நாடாளுமன்றத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தலில் எல்லாம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டார். திசை மாறிப் பறப்பவராக இருந்து கொண்டு எங்களைத் தீவிரமாக விமர்சிக்கின்றார்.

அரசியலில் அவர் இப்போதுதான் அ ஆ படிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மை சகட்டு மேனிக்கு விமர்சிக்கின்றார். அவர் முதலில் அரசியல் படிக்கவேண்டும். எமது இலட்சியத்தை எப்படித் தந்திரமாகப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் அவர் படிக்கவேண்டும் என்றார்.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

2 comments

Siva October 22, 2018 - 9:12 pm

அ முதல் ஒள வரையான பன்னிரு எழுத்துக்களையும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாகப் படித்துக் கரைத்துக் குடித்த திரு.மாவை சேனாதிராசாவின் கருத்துக்கள் ஏற்புடையனவல்ல. திரு. விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதோ அன்றி அவருக்காக வக்காலத்து வாங்குவதோ எனது நோக்கமல்ல.

முதலில், அரசியலுக்கு வரும் ஒருவர் நீதிமன்றப் படிகளை ஏறுவதோ அன்றி விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதோ, ஒன்றும் அவமானகரமான செயலுமல்ல, புதுமையுமல்ல. பொறுப்பில் உள்ள ஒருவர் சில சந்தர்ப்பங்களில் எடுக்கும் அரசியல் முடிவுகள் தவறாக அமைந்து விடுவதென்பது, புதுமையல்லவே?

இவர் கூறுவது போல், திரு விக்னேஸ்வரன் பதவி ஆசையிலோ அன்றி அரசியல் செய்யும் விருப்பிலோ இத் துறைக்கு வரவுமில்லை, இவர் செய்த தியாகம் காரணமாக வரவுமில்லை, என்பதே உண்மை. போர் வெற்றிக்குப் பின்னர் திரு. மகிந்த ராஜபக்ஷ மக்கள் செல்வாக்கில் அதியுச்சம் தொட்டிருந்த ஒரு காலத்தில்,வடக்கில் திரு. டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரம் பலம்பெற்றிருந்த ஒரு தருணத்தில், /அவரின் வெற்றிவாய்ப்பை உறுதி செய்துகொண்டபின்/ என்றோ நடத்தியிருக்க வேண்டிய வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.இதையெல்லாம் ராஜதந்திரக் கணக்குப் போட்ட திரு. சம்பந்தன், ‘எங்கோ சிவனே’, என்றிருந்த திரு. விக்னேஸ்வரனை வலிந்து உள்வாங்கியிருந்தார் என்பதே உண்மை. திரு. மாவை சேனாதிராஜா போட்டியிட்டிருந்தால் வடமாகாண சபையை கைப்பற்றியிருக்க முடியாது, என்பதே சகலரினதும் கணிப்பாக இருந்தது. அன்றைய உண்மையான களநிலையும் அதுதான்.தனது திறமையில் நம்பிக்கையற்றிருந்த திரு. மாவை சேனாதிராஜா போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாரென்பதே உண்மை.

வடமாகாண விவசாய அமைச்சர் திரு.துரைராஜசிங்கம் கூறுவது போல், வடக்கு முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தை உதாசீனம் செய்பவராக இருந்தால், தமிழ்த் தரப்பினரின் விருப்பத்துக்கு விரோதமாகப் பதவிப் பிரமாணமெடுக்க மத்தியைத் தேடிச் சென்றிருக்க மாட்டார். மத்தியின் இனவிரோத/ மாற்றான் தாய் மனப்பாங்குச் செயற்பாடுகளை இவர்கள் கண்டுகொள்ளவில்லை, என்பதற்காக எல்லோருமே அவற்றை அனுசரித்துப் போகவேண்டுமென இவர்கள் எதிர்பார்ப்பது இவர்களின் அறிவீனமே!

50 வருடஅரசியல் வாழ்வை அனுபவித்த இவர்கள் முழுமையாக அரசியலைப் படிக்காதபோது, வெறும் 5 வருடங்களில் அரசியல் சூட்சுமங்களை முதலமைச்சர் அறியாதிருப்பது, ஒன்றும் புதுமையில்லையே! திரு. மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் முதிர்ச்சி இருக்குமானால், ஒரு புறம் ஒற்றுமை பேசிக்கொண்டு, மறுபுறம் தனது காழ்ப்புணர்ச்சியை மேடைக்கு மேடை பேசிக் காட்டிக் கொண்டிருக்கமாட்டார்.

பொது மனிதனாக, எமக்கேயுரிய அதிகாரங்களை பெற்றுச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வேட்கை கொண்ட ஒரு சிறுபான்மைத் தமிழனாக நானும், எமது இனமும் வேண்டுவதெல்லாம், வடக்கு- கிழக்கு நிலமும், ஆட்சியும் பெரும்பான்மையினர் கைகளில் வீழ்ந்துவிடக் கூடாது, என்பது மட்டுமே! தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திப்பார்களா?

Reply
Logeswaran October 22, 2018 - 11:51 pm

A. விக்னேஸ்வரன்
1. ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சேனாதி, விக்னேஸ்வரனால் விடுதலை செய்யப்பட்டார்.
2. ஓய்வுபெற்ற நீதியரசர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பதால் தேர்தலில் நிறுத்தப்பட்டார்.
3. பிழையாகச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சித்தார்.
4. சிலர் குழப்பிய போதும் வடமாகாண சபையை முடிந்த அளவு நடத்தினார்.
5. உரிமை எடுத்தால் அபிவிருத்தி தானாக வரும் என்று சொன்னார்.
6. தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணையை மீறியதை எதிர்த்தார்.

B. சேனாதி
தமிழரசுக்கட்சியின் தலைவராக செயல்பட்டு தனக்குத் தெரிந்த அரசியல், வரலாறு மற்றும் தந்திரங்கள் என்பவற்றைப் பாவித்து தேர்தலில் 180000 வாக்குகளை இழக்க வைத்தார்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More