Home இந்தியா பிஷ்னோய் மக்களும், தாய்பாலூட்டும் அரிய வகை மான்களும், வேட்டையாடிச் சிக்கிய சல்மான்கானும்….

பிஷ்னோய் மக்களும், தாய்பாலூட்டும் அரிய வகை மான்களும், வேட்டையாடிச் சிக்கிய சல்மான்கானும்….

by admin

குளோபல் தமிழ்ச்செய்திகளின் அலுவலக செய்தியாளர்..


அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தண்டனை குறைவானது எனவும், ஆகக் கூடியது 6 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் பிஷ்னோய் சமூகத்தின் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயற்கையின் நண்பர்களான பிஷ்னோய் மக்களும் அவர்களின் வாழ்வியலும்…

பிஷ்னோய் மக்கள் (Bishnoi People) 540 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்களின் ஆன்மிக குரு ஜாம்பேஷ்வர் என்ற ஜாம்பாஜி அருளிய 29 நன்னெறிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். ’பிஷ்’ எனும் சொல்லிற்கு இருபது என்றும் ’னோய்’ எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள். தங்களின் ஆன்மிக குரு அருளிய 29 நன்னெறிகளில், தங்களின் அடிப்படை உடல் நலத்தை பேணி காத்திட 10 நன்னெறிகளும், நல்ல சமூக பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வாழ்ந்திட 7 நன்னெறிகளும், இறைவனை வழிபட 5 நன்னெறிகளும், கால்நடைகளை நன்கு வளர்த்தல், விலங்குகளை கொல்லாதிருத்தல், செடி, கொடி, மரங்களை அடியுடன் வெட்டாமல், இயற்கை சூழ்நிலையை காத்திட 7 நன்னெறிகளும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். தூய சைவ உணவை மட்டுமே உண்பவர்கள். பிஷ்னோய் மக்கள் இயற்கையின் நண்பர்கள்.

1731-ஆம் ஆண்டில், ராஜஸ்தான், மாநிலம், ஜோத்பூரிலிருந்து தென்மேற்கே 26 கி. மீ., தொலைவில் தார் பாலைவனத்தில் உள்ள கேஜர்லி (Khejarli)  என்ற கிராமத்தின் மரங்களை வெட்ட சென்ற மார்வார் மன்னர் அபய் சிங்கின் உதவியாளர்களை, அம்ருதாதேவியின் தலைமையில் பிஷ்னோய் பழங்குடி மக்கள் தடுத்து நிறுத்தியதால், 363 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மன்னரின் வீரர்களால் கொல்லப்பட்டனர்.

1730-ஆம் ஆண்டில் மரங்களை காத்திட, உயிர் துறந்த பிஷ்னோய் மக்களின் நினைவிடம்

அரியவகை மான்களுக்கு தமது தாய்ப்பாலை ஊட்டும் பிஷ்னோய் மக்கள்…


இந்த இனக்குழுக்களில் உள்ள பெண்களிடம் ஒரு வினோத பழக்கம் உள்ளது. தாய் மான் இறந்துவிட்டால் மான் குட்டிகளுக்கு இங்குள்ள பெண்களே தாய் பால் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்து காட்டில் விடுகிறார்கள். மேலும் ஆண்கள் தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்களில் கொஞ்சம் பயிர்களை அரறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இவர்கள் வாழுகிறார்கள்.

காட்டையும், காட்டு விலங்கினங்களை பாதுகாத்தல்

பிஷ்னோய் மக்கள் காட்டையும், காட்டு விலங்குகளையும் நேசிப்பதில் சிறந்தவர்கள். கால்நடைகள் வளர்ப்பே தங்களின் தொழில். தங்கள் வாழும் பகுதிகள் சுற்றி திரியும் சிங்காரா வகை மான்கள், புள்ளிமான்கள், கலைமான்கள், காட்டெருமைகள், மயில்கள் போன்ற விலங்குகள் தங்களின் வேளாண் நிலங்களில் மேய்ந்தாலும், அதனை அடித்து விரட்டுவதில்லை. கடும் கோடைக்காலத்தில் காட்டு விலங்குகள் நீர் அருந்த வசதி செய்துள்ளனர். இந்த நிலையிலேயே மும்பை திரைப்பட நடிகர் சல்மான் கான் மற்றும் செயிப் அலி கான் ஆகியோர் இங்குள்ள காட்டு மான்களை வேட்டையாடி கொன்ற காரணத்தால், இம்மக்கள் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு காட்டியதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கையும் கடந்த 20 வருடங்களாக நடாத்தி வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More