Home இலங்கை கன்னியா விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்ட இடந்தர வேண்டாம் 

கன்னியா விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்ட இடந்தர வேண்டாம் 

by admin
கன்னியா விவகாரம் தொடர்பில், கடந்த மாதம் எடுத்த முடிவை மாற்றி, கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்ட இடந்தர வேண்டாம். விகாரை கட்டப்படும் முயற்சி அதிகாரிகளினாலோ, தேரர்களினாலோ எடுக்கப்படுமானால், அந்த பிரதேசத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
இதற்கு தொல்பொருளாராய்ச்சி திணைக்களமும், மாவட்ட செயலகமும் பொறுப்பேற்க வேண்டி வரும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமாரவுக்கு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.
இதையடுத்து, இத்தகைய முயற்சியை தான் உடன் நிறுத்துவதாக  திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார அமைச்சருக்கு உறுதியளித்துள்ளார்.
இதுபற்றி அமைச்சர் மனோ கூறியுள்ளதாவது,
வெந்நீரூற்று விநாயகர் கோவில், புனரமைப்பு பணிகளுக்காக, கோவிலின் உரிமையாளர்களினால் கடந்த சில வருடங்களுக்கு உடைக்கப்பட்டது.  அவ்வேளையில் அந்த ஆலயத்தின் அடிப்பகுதியில் காணப்பட்ட புராதன இடிபாடுகளை தொல்பொருளாராய்ச்சி திணைக்களம் பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி பிரகடனமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த இடத்தில், பெளத்த விகாரை இருந்ததாக கூறி பெளத்த விகாரை ஒன்றை அமைக்க, அந்த பிரதேசத்தில் இருக்கின்ற வில்கம் விகாரை தேரர் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையிலேயே,   கடந்த மாதம் இது தொடர்பில் எனது அறிவுறுத்தலின் பேரில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோவில் இருந்த சிறிய இடிபாட்டு பூமியை அப்படியே பாதுகாப்பது எனவும், அங்கே விகாரை கட்டுவது இல்லை எனவும், அதே வளாகத்தில் அருகாமையில் வெந்நீரூற்று விநாயகர் கோவில் கட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு வழங்கும்.
இந்த முடிவுகள் மாற்றப்படுமானால், எதிர்விளைவுகளை தொல்பொருளாராய்ச்சி திணைக்களமும், மாவட்ட செயலகமும் சந்திக்க வேண்டி வரும்.
எனவே கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்ட இடந்தர வேண்டாம் என மாவட்ட செயலாருக்கு கூறியுள்ளேன். இன்றைய தினத்தில் பணிப்பாளர்-நாயகம் பேராசிரியர் மண்டாவெல நாட்டில் இல்லை என எனக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. #கன்னியா #விநாயகர் கோவில் #விகாரை #திருமலை   # மனோ கணேசன் #பணிப்புரை #வெந்நீரூற்று

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More