Home இலங்கை தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்

தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்

by admin

“தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். காவல்துறையினர் மட்டுமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இரண்டு நாள்கள் பயணமாக வடக்கிற்கு வருகை தந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பொதுத் தேர்தல் தொடர் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சில தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதாவது வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அவை நிறுத்தப்பட வேண்டியவை. யாழ்ப்பாணத்தில் இந்த விதி மீறல்கள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. அத்தோடு இங்கே அரச நிதியில் அமைக்கப்படும் வீதிகள் சில வேட்பாளர்களினால் திறப்பு விழாக்கள் செய்யப்பட்டு திறக்கப்படுகின்றன. அதனை உடனடியாக நிறுத்தும்படி நான் உத்தரவு பிறப்பித்திருக்கின்றேன்.

அத்தோடு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பில் விரைவில் அந்த அறிவித்தல் வரும். அதே போல வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 4 தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.

தேர்தல் கடமைகளில்  காவல்துறையினர்  மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இராணுவத்தினர் அந்தக் காரணத்திற்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.  எமக்கு ஒரே ஒரு விடயத்திற்கு தான் விமான படை, கடற்படையின் உதவி தேவைப்படுகின்றது. தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து வருவதற்கு அவர்களின் உதவி தேவையாக உள்ளது.

எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துசெல்லும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள். தேர்தல் கடமைகள் அனைத்திலும்  காவல்துறையினர் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் – என்றார் #தேர்தல்  #இராணுவத்தினர்  #மகிந்ததேசப்பிரிய   #விதிமுறைமீறல்கள்   #தனிமைப்படுத்தல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More