Home இலங்கை தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….

தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….

by admin

தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு
Consortium of Tamil Associations – Australia
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுடனான Zoom தொடர்பாடல்
தொடர்பாடல் செய்பவர் – லெஸ்லி குணரத்தினம்.


25.10.2020 ஞாயிற்றுக் கிழமை காலை இலங்கை நேரம் 8.20 மணிக்கு
பேசுபொருள் – தமிழ் மக்களின் ஆற்றல் மேம்பாட்டிற்கு நான் செய்யவிருப்பதும் அதனைப்பெற நான் வகுத்திருக்கும் திட்டமும்.
குரூர் ப்ரம்மா…………………
எல்லோருக்கும் வணக்கம்!

தமிழ் மக்களின் ஆற்றல் மேம்பாட்டிற்கு நான் வகுத்திருக்கும் வரைபடமானது எமது அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருக்கும் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறுகின்றேன்.


தன்னாட்சி என்று கூறும் போது நாம் இதுவரை காலமும் கோரி வந்த தனிநாடு என்ற கோரிக்கைக்கு மாறாக முன்னர் தந்தை செல்வா கோரி வந்த சமஷ;டி முறையிலான தன்னாட்சி பெற்ற ஒரு அலகையே குறிப்பிடுகின்றோம். எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் உறவுகளும் சிங்கள சகோதரர்கள் பலரும் நாம் இன்னமும் தனிநாட்டைக் கோருவதாகவே கற்பனை பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பூகோள அரசியலின் காரணமாக அவ்வாறான ஒரு நிலை ஏற்படக்கூடும் என்பது வேறு விடயம். ஆனால் நாம் எமது கொள்கையாகக், குறிக்கோளாக வகுத்திருப்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் சமஷ;டி அமைப்பையே. அதனைச் சிங்கள மக்கள் நாட்டைப் பிரிப்பதாகக் கற்பனை பண்ணுகின்றார்கள். அவர்கள் மத்தியில் புரிந்துணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். எமது மக்களும் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


நாம் சூழலுக்கு ஏற்றவாறு எமது கொள்கைகளை வகுத்தே முன்னேற வேண்டும். இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கொண்டு வரமுடியாது என்று எம்முள் பலர் முடிவெடுத்திருப்பது சென்ற கால நிகழ்வுகளின் அடிப்படையிலேயே. முன்னர் எமக்கு நடந்தவற்றிற்கு சிங்களப் பொது மக்கள் எந்தளவுக்குத் துணைபோனார்கள் என்பதை அவர்கள் அக்கால கட்டத்தில் மௌனிகளாக இருந்ததை வைத்தே எடைபோடுகின்றோம். ஆனால் அவர்கள் மௌனிகளாக இருந்ததற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக அவர்களுக்கு எம்மீது ஏற்படுத்தப்பட்ட தப்பபிப்பிராயங்கள் அவர்கள் மனதில் இதுகாறும் வேலை செய்துவந்தன. இலங்கை சிங்கள பௌத்த நாடு, பௌத்தம் வரமுன் இன் நாடு அரை மனிதர்கள் வாழ்ந்த நாடு என்றெல்லாம் மகாவம்ச சிந்தனையில் சிங்கள மக்கள் இதுகாறும் வாழ்ந்து வந்துள்ளார்கள். தமிழர் சோழர் காலத்து வந்தேறுகுடிகள். தமக்கிருக்கும் உரித்துக்களுக்கு மேலதிகமாக அவர்கள் உரிமை கொண்டாடுகின்றார்கள் என்பது சிங்கள மக்களின் எண்ணம். இதையெல்லாம் மாற்றவே நான் இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தேன்.


ஆகவே சிங்கள மக்களுக்கு எதிரான ஒரு சிந்தனையில் பயணிக்காது உண்மையின் பாற்பட்டு நாம் பயணித்து எமக்குரிய தன்னாட்சியை சமஷ;டி அடிப்படையில் பெறவேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
இதற்கான வரைபடம் பல விதமாக, பல கோணங்களில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.


முதலாவது அறிவு ரீதியான, அனுபவ ரீதியான கலந்துரையாடலின் அடிப்படையில் புலத்தில் உள்ளோர் புலம்பெயர்ந்துள்ளோர் மத்தியில் இருந்து புத்திஜீவிகளை தேர்ந்தெடுத்து உள்ளடக்கி குழுவொன்று அமைத்து வரைபடம் தயாரிக்கப்பட வேண்டும். எம் வசம் இருக்கும் சிந்தனைகளை அந்தக் குழுவை உரை கல்லாகப் பாவித்து தீட்டி எடுத்து முடிவு எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக அரசியலில் வெற்றிபெற நாம் எம் மக்களை அரசியலில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த வேண்டும். எவ்வாறு அதனைச் செய்வது என்று கலந்துரையாடி முடிவுக்கு வருவோம்.


நாம் இதுகாறும் நடந்தவாறு தனிப்பட்டவர்களின் தான்தோன்றித்தனமான நெறிப்படுத்தல்களுக்குக் கட்டுப்படாமல் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கூட்டு ரீதியான பயணத்தில் பயணிக்க இருக்கின்றோம். எமது பலத்தையும் பலவீனங்களையும் எடைபோட்டு, எம்மிடையே இருக்கும் வளங்களையும் திறமைகளையும் ஆய்ந்தறிந்து முடிவுகளை எடுக்கவிருக்கின்றோம். எம்மைச் சார்ந்த கூட்டுக் கட்சிகளில் பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் உள்ளார்கள். அவர்களையும் உள்ளடக்கியே நாம் முன் செல்ல இருக்கின்றோம். இது தனிப்பட்ட பயணமாக இல்லாது புலத்தினதும் புலம்பெயர் மக்களினதும் கூட்டு நடவடிக்கையாகவே பரிமாணம் மாறி பரிணமிக்க இருக்கின்றது. எமது முதலீடு இனிமேல் அறிவாகவே இருக்கும். எமது ஆயுதங்கள் இனிமேல் அறிவாக மாறும்.


தன்னாட்சி என்ற அரசியல் இலக்கைப் பெற நாம் பாவிக்க இருக்கும் மற்றைய ஆயுதங்கள் தற்சார்பும் தன்னிறைவும் ஆவன. தற்சார்பு என்பது நாம் எம்மைச் சார்ந்து செயற்படுவது. முதலில் அதற்கு எம்மிடையே அறிவுபூர்வமான ஒற்றுமை வேண்டும். வெறும் கட்சி நன்மைகளைப் பற்றியே கனவுகாணாமல் மக்கள் நலன்கருதி நாம் ஒன்றுபட வேண்டும். இது புலத்திலும் புலம்பெயர் நிலத்திலும் நடைபெறவேண்டும். நாம் சுயநலம் களையாவிட்டால் மக்கள் நலம் எம் கையைவிட்டுப் போய்விடும். யூதர்களைப் பார்த்து நாம் எம்மை ஒற்றுமைப்படுத்த, பலப்படுத்த முன்வரவேண்டும்.


எமது உரிமைகளை வென்றெடுக்க உலகளாவிய சிந்தனைக்கூடம் ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும். மேலும் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக சில அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தான் இந்த நம்பிக்கைப் பொறுப்பு அமைப்புக்குப் பொறுப்பாக முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பதவி வகித்த, மேலும் சமாதானப் பேச்சு வார்த்தை காலத்தில் உடனடி மனிதாபிமான சேவைகளுக்கான உப குழுவுக்குப் பொறுப்பாக இருந்த நண்பர் செல்வின் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதனைச் சேவையாகக் கருதியே செயற்பட்டு வருகின்றார். ளுரடிஉழஅஅவைவநந கழச ஐஅஅநனயைவந ர்ரஅயnவையசயைn நேநனள என்பதை ளுஐசுர்N என்று அழைத்தார்கள்.
நாம் எமது நடவடிக்கைகளில் இறங்கும் போது நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாடுகளே இனி எமக்கு விடிவைக் கொடுக்கும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்குக் காரணம்.


சமஷ;டிக்காக நாம் அரசியல் ரீதியாகப் பயணிக்கும் போது எமது பலம் குன்றிய சமூக அலகுகளையும் நாம் எம்முடன் கூட்டிச் செல்வது அவசியமாகும். இவற்றில் குறிப்பாக மக்கள் போராட்டங்களை மேற்கொள்வதும், அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை உள்வாங்கி செயற்படுவதும் முக்கியமானவை. எமது புத்தி ஜீவிகளை உள்வாங்குவதும் முக்கியமானதாகும்.


தற்சார்பு என்று நாம் கூறும் போது வடக்கு, கிழக்கின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தகவல்களை திரட்டுவதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும், வாய்ப்புக்களை இனங்காண்பதற்கும் ‘பொருளாதார ஆய்வு நிலையம்’ ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதற்குப் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியும் நிபுணத்துவமும் அவசியம். இந்த நடவடிக்கையினை முடிந்தளவு விரைவில் நாம் மேற்கொள்வோம்.
முக்கியமாக கல்வி மேம்பாடு அவசியமானது. வடக்கு-கிழக்கில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்தரத்தை உயர்த்தி மீண்டும் அதனை முதல் இடத்துக்கு கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் மற்றும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், கூடுதலான மாணவர்கள் அதனை பெறுவதற்குமான நடவடிக்கைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, விசேடமான தொழிற் கல்விநெறிகள், நிபுணத்துவ பாடநெறிகள், ஆங்கில கல்வி ஆகியவற்றை எமது மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை செய்யமுடியும். நவீன கணனி முறைகளைக் கூட இதற்காகப் பாவிக்கலாம்.


முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கு புலம்பெயர் தமிழ் மக்களே கணிசமான உதவிகளை அவர்களுக்குக் கடந்த காலங்களில் செய்துள்ளார்கள். இவர்களுக்கான விசேட திட்டம் ஒன்றை தயாரித்து முக்கியமான சில வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் பெற்று நடைமுறைப்படுத்த ஆவன செய்வோம்.

மாற்றுவலுவுள்ளோர் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இந்த திட்டங்களை தமிழ் மக்கள் நம்பிக்கை பொறுப்பின் கீழ் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றோம்.
வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் 90,000 வரையிலான விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம். இதற்கு முன்னோடியாக ‘தேவைகள் மதிப்பீடு’ ஒன்றை விதவைகள் மத்தியில் நாம் விரைவில் நடத்த இருக்கின்றோம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிவடைந்துள்ளன. முன்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் செய்த தேவைகள் மதிப்பீடு இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.


விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை ஆகிய மூன்று பிரதான தொழில்துறைகளிலும் நாம் மறுமலர்ச்சி காண்பதற்கு அதிகளவு முதலீட்டை கொண்டுவருவதுடன் நவீன தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நிலையையும் உருவாக்க வேண்டும். இவற்றை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு வரப்பிரசாதங்களை சிறந்த முறையில் நாம் பயன்படுத்துவதுடன் தமிழக அரசாங்கம், தமிழக பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றினதும் தமிழக முதலீட்டாளர்களினதும் பங்களிப்புக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்பையும் நான் வழங்குவேன்.


எமக்குக் கிடைக்கும் சிறிய வாய்ப்புக்களை பயன்படுத்தி எமது மாணவர்கள் தமது திறமைகளை அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்துவருகின்றார்கள். இவர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை இது காட்டுகின்றது. விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்களை புலம் பெயர் மக்களுடன் இணைந்து நாம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.


நான் முன்னர் கூறியது போல, எமது சமுகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இளையோர்களின் காத்திரமான பங்களிப்பு அவசியம். இளையோர்களை முடிந்தளவுக்கு உள்வாங்கி அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது. நாம் முன்னெடுக்கவிருக்கும் நிறுவன ரீதியான செயற்பாடுகளில் இளையோர்கள் இணைந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.


எமது வலுவூட்டல் நடவடிக்கைகளில் நாம் மலையக மக்களையும் மறந்துவிடக்கூடாது. புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்று மலையக அரசியல்வாதிகளுடன் இணைந்து அவர்களுக்கான சில அபிவிருத்தி செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்க முடியும் என்பது எமது நம்பிக்கை.


முக்கியமாக, தமிழக முகாம்களில் அகதிகளாக வாழும் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால், எத்தகைய சமூக, பொருளாதார நிபந்தனைகளின் கீழ் அவர்கள் தற்போது வாழ்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொண்டே இதைச் செய்யவேண்டி இருக்கிறது. அங்குள்ள மக்களை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற நடவடிக்கைகள் எடுப்பது பல்வேறு வழிகளில் அவசியமானதாக இருக்கின்றது. நான் இவ்வாறான புலம்பெயர் மக்களுடன் இந்தியாவில் வைத்துப் பேசியுள்ளேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரிகளில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இது பற்றி நான் முதலமைச்சராக இருந்த போது அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியிருந்தேன். மாணவர்கள் கல்வியைத் தொடரலாம் அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து தருவதாக அவர் ஒத்துக் கொண்டார். அதாவது குடும்பத்தவர்கள் இலங்கைக்குத் திரும்பினாலும் அவர்களின் மாணவ குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியில் எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி மொழி தந்தார்.


கடைசியாக நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டியது தன்னிறைவு என்ற மேம்பாட்டை. நாம் எம்மை வலுவூட்டும் அதே சமயம் மற்றவர்களையே எந்த நேரமும் எதிர்பார்;த்துக் கொண்டிருக்கும் எமது வழக்கத்தை நாம் மாற்ற வேண்டும். வீடுகள் நாளாந்த உணவுத் தேவைகளுக்காகத் தன்னிறைவு பெற உழைக்க வேண்டும். கிராமங்கள் அவ்வாறே செயற்பட வேண்டும். முழு தமிழர் கிராமங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு வைத்து பண்டமாற்றுகளுக்கு இடமளிக்க வேண்டும். இந்த விதத்தில் நாம் யாவரும் தமிழ்ப்பேசும் மக்கள் என்ற ஒரு எண்ணம் வலுப்பெறும். கூட்டு நடவடிக்கை பொருளாதாரத்திலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படும்.


தற்சார்பு தன்னிறைவு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வடக்கு கிழக்கின் வளங்களைப் பாதுகாப்பதோடு வளங்களை உச்சப்பயன்பாட்டிற்கு உட்படுத்தி எம்மவரின் வறுமையைப்போக்கிப் பலம் பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலான ஆய்வுகளை, ஆலோசனைகளை வழங்குவதோடு முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்
கல்வி மேம்பாட்டிற்கு இன்றைய உலகின் அபிவிருத்தியை அடியொற்றியதான தொழில்நுட்பக் கல்விக்கான ஆலோசனைகளையும் முடிந்தால் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.


எங்கள் பாரம்பரிய கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் வளர்ந்த சமூகங்களுக்குரிய புதிய கலை வடிவங்களை தோற்றுவிப்பதற்கான ஆலோசனைகளையும் வசதிகளையம் ஏற்படுத்தித் தரவேண்டும் உயிர்ப்புள்ள சமூகமாக நாம் மாற இவை அவசியம். இவைக்கெல்லாம் நிதியுதவி அவசியம். அன்மையில் எனது தேர்தல் செலவினம் பற்றிய முழு விபரங்களையும் வெளியிட்டிருந்தேன். கிடைக்கும் ஒவ்வொரு சதத்திற்கும் கணக்குக் காட்டி வருகின்றோம் நம்பிக்கைப்பொறுப்பும் அதையே செய்யும்.


ழுஃடு யுஃடு பரீட்சைப் பெறுபேறுகளை அளவு கோலாக வைத்து வடக்கு கிழக்கில் கல்வித் தரம் வீழ்ந்துவிட்டது என்று கணிப்பிடப்படுகின்றது. எனவே இப்பெறுபேறுகளை உயர்த்துவதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் போல பரீட்சைக்கான தயார்படுத்தல் கல்வி நடவடிக்கையில் முழுஅளவில் நடைபெறவேண்டும். இதற்காக பாடசாலை ஆசிரியர்களும் பரீட்சை இலக்கு நோக்கிய கற்பித்தலில் கவனம் செலுத்தவேண்டும். அறிவுக்கான ஆய்வுகளுக்கான அடித்தளமிட வேண்டியிருக்கும் போது கல்வி இன்று வெறும் பரீட்சைக்கான கல்வியாக பரிணமித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுவிடவேண்டும் அதற்கான போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதனால் எமது கல்வி, பரீட்சை மையக் கல்வியாகியுள்ளது. எல்லாம் பல்கலைக்கழக இலவசக் கல்வியைப் பெறுவதற்கேயாகும்.


பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் படிப்படியாக அதிகரிப்பதற்கு மாவட்டகோட்டா அனுமதியும் அந்தந்த சமூகங்களின் ஊக்கமும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் காரணமாகின்றன. ஆனால் எமது இளம் சமூகம் கற்பதைவிட்டு களியாட்டங்களில் அதிக கரிசனைகாட்டுகின்றனர். இந் நிலையை நாம் மாற்ற வேண்டும்.


இவையெல்லாவற்றிற்கும் உங்கள் முதலீடு அவசியம்.
பெறுமதிசேர் உற்பத்திக்கான புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் தேவை. விவசாயக் கைத்தொழில் மேம்படுத்தப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எமது உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வியை அதிகரிக்கவேண்டும்.


எமக்கு அவசியமான உயர்கல்வி புலைமைப்பரிசுகள் வழங்குதல் வேண்டும். இவையாவும் எம்மக்களைத் தன்னிறைவை நோக்கிக் கொண்டு செல்லும் தன்மை வாய்ந்தன. இவற்றையெல்லாம் நான் செய்து முடிக்க எனக்கு திறம்மிகு உதவியாளர்கள் தேவை. சுயநலம் களைந்த உதவியாளர்கள் தேவை. அவர்களின் துணைகொண்டு எமது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு நடவடிக்கைகளில் வெற்றி பெற முடியும் என்று நான் முற்றாக நம்புகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran October 28, 2020 - 12:21 am

தன்னாட்சி, தற்சார்பு மற்றும் தன்னிறைவு தொடர்பாக பின்வரும் பணிகளை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

1.தன்னாட்சியை உருவாக்க உதவக்கூடிய சில பணிகள்:

1.1 தமிழர்களின் வரலாற்றையும் நடந்த, நடக்கின்ற மற்றும் நடக்கப்போகும் தமிழ் இன அழிப்பை உலகறியச் செய்யுங்கள்.

1.2 இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய அந்த நாட்டவர் அடங்கிய 3 குழுக்களை உருவாக்குங்கள்.

1.3 பிரபல சிங்களவர்கள் அடங்கிய குழுவை ஒவ்வொரு மாகாணத்திலும் உருவாக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுய ஆட்சியை அமைக்க உதவ வையுங்கள்.

2. தற்சார்பு தொடர்பாக செய்யக்கூடிய சில பணிகள்:

2.1 பணிகளை முடிக்கக்கூடிய தன்னார்வலர்களைப் பயன்படுத்தி வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்துங்கள்.

2.2 நிலம், பாதுகாப்பு, காற்று, நீர், உணவு, உடுப்பு, வீடு, மருந்து, வேலை, தினசரி வாழ்க்கை முறை தொடர்பான குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை தொடர்ந்து மதிப்பீடு செய்யுங்கள்.

3. தன்னிறைவு தொடர்பாக தேர்ந்தெடுக்கக்கூடியது சில பணிகள்:

3.1 நிலமற்ற தமிழர்களை இருக்க மற்றும் பயிரிடத் தேவையான நிலத்தின் உரிமையாளராக்குங்கள்.

3.2 தமிழர்கள் வன்முறை அற்று உயிருடன் இருக்கத் தேவையான பாதுகாப்பை ஏற்படுத்துங்கள்.

3.3 சுவாசிக்கக் கூடிய கழிவு நாற்றம் மற்றும் தூசிகள் அற்ற காற்றை பராமரிக்க உதவுங்கள்.

3.4 குடிக்கக்கூடிய சுத்தமான நீரை அருந்த ஏற்பாடு செய்யுங்கள்.

3.5 பயிர் செய்து உணவு உண்ண வசதிகளை வழங்குங்கள்.

3.6 உள்ளூரில் ஆடைகள் செய்ய வசதிகளை ஏற்படுத்துங்கள்.

3.7 வீடு அற்ற தமிழர்களை அடிப்படை வீட்டு உரிமையாளராக்குங்கள்.

3.8 மருந்து எடுத்து உடல் நலம் பேண வசதி செய்யுங்கள்.

3.9 நிதி கொடுக்கும் வேலையை உருவாக்க உதவுங்கள்.

3.10 தமிழ்க் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளடங்கிய சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்ற அறிவை மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகள் (Symbolic Projects) செயல்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் ஓரளவு பயனடைவார்கள்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More