Home இலங்கை தடுப்பில் எமக்கு இராசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். புலிகளின் முன்னாள் போராளி சாட்சியம்:-

தடுப்பில் எமக்கு இராசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். புலிகளின் முன்னாள் போராளி சாட்சியம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

தடுப்பில்  இருக்கும் போது எமக்கு  இராசாயன உணவு தந்தார்கள். ஊசி  போட்டார்கள். ஊசி  போட்ட  உடன்  ஒரு  போராளி உயிரிழந்தார்.  தடுப்பில் வைத்து  எமக்கு  ஏதோ  செய்துள்ளார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் முன்னாள்  போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

நல்லிணக்க  பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவினரிடமே குறித்த போராளி  அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன்  போனதற்கான  ஆதாரம்  நிறைய இணையங்களில் வெளிவந்துள்ளன. அதற்கான பல  சாட்சியங்களும் இருக்கின்றன. அவர்கள் பயத்தில் கதைக்கின்றார்கள் அல்ல. கதைக்க  போனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எங்களுக்கு  இலங்கை அரசாங்கம் நீதியை  பெற்று  தர  போவதில்லை.. தமிழ் அரசியல் கட்சிகள் கூட தற்போது “பல்டி ” அடிக்கின்றார்கள். எனவே கண்டிப்பா சர்வதேசத்தில் இருந்து நடுநிலையான நாடுகள்  தான்  எங்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

யுத்த தர்மம் என்ற  ஒன்று  இருக்கின்றது.இலங்கை அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தருமம் என்றால் என்ன என்பதனை போதிக்க வேண்டும். சரணடைந்தவங்களை சுடுவது நியாயம் அல்ல. ஏனெனில் அவங்க நிராயுத பாணியாக  தான்  சரணடைந்தவங்கள்.

நான்  ஒரு  முன்னாள் போராளி தடுப்பால  வந்த  பின்னர்  யுத்த  நினைப்பை விட்டு  ஒதுங்கி  இருக்கின்றோம்.

தடுப்பில்  இராசாயன  உணவு  தந்தாங்கள்.

நாங்கள்  தடுப்பில்  இருக்கும் போது  எமக்கு  இராசாயன  உணவை  தந்து இருக்கின்றார்கள். நான்  தடுப்புக்கு  போக  முன்னர்  நூறு  கிலோ  தூக்கிக் கொண்டு  கிலோ மீற்றர்  கணக்குக்கு  ஓடுவேன். தடுப்பால  வந்த  பிறகு  ஒரு  பொருளை  தூக்க முடியவில்லை. அத்துடன்  கண்  பார்வையும்  குறையுது. இதில்  இருந்து எங்களுக்கு ஏதோ  நடந்து  இருக்கின்றது என்பது எமக்கு  தெளிவாக  தெரிகின்றது.

தடுப்பூசி  போட்டாங்கள்.

தடுப்பில  நாங்கள்  இருந்த  போது எமக்கு  எல்லாம்  தடுப்பு  மருந்து  ஏற்றினவர்கள்.  ஏதோ  ஒரு  ஊசி  போட்டார்கள்  எது  என்ன  தடுப்புக்கான  ஊசி  என  எமக்கு  தெரியாது. அந்த  தடுப்பு  ஊசி  போட்ட  போராளி  ஒருவர்  ஊசி  போட்ட அன்றைய  தினம்  இரவே  உயிரிழந்தார்.

அத்துடன்  தடுப்பில்  இருந்து  வெளியேறிய  12 ஆயிரம்  போராளிகளுக்கும்  மறுவாழ்வு அளிக்கபப்ட்டாலே  மீண்டும் போராட்டம் துளிர்க்காது. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More