Home இலங்கை நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – HRW

நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது – HRW

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லிணக்க பொறிமுறைமை குறித்த ஆலோசனை செயலணியின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என  தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகம்  செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மை மற்றும் நீதி குறித்த இலங்கை பிரஜைகளின் அபிலாசைகள் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகின்றது என சுட்டிக்காட்டியுள்ளதுடன் வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறையின் கீழ் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற செயலணியின் பரிந்துரை மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினைகள், காணாமல் போதல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த செயலணி பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கால மாறு நீதிப் பொறிமுறைமை குறித்து இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களினதும் பிரதிபலிப்புக்களை இந்த செயலணி வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பரிந்தரைகளை அமுல்படுத்துவதற்கான ஒர் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கால மாறு நீதிப் பொறிமுறைமை தொடர்பிலான பரிந்துரைகளை அனைத்து இன சமூகங்களினதும் பிரதிநிதித்துவத்துடன் முன்வைக்க இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து இந்த செயலணி பரிந்துரைகளை தயாரித்துள்ளதாகவும் இதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் மட்டுமன்றி சொந்த நாட்டின் அனைத்து இன மக்களும் நல்லிணக்கம் மற்றும் நீதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி: HRW

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More