Home இலங்கை யாழில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

யாழில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

by admin
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990ம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலையம் என்னும் பெயரில் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலிவடக்கில் கீரிமலை, காங்கேசந்துறை, தையிட்டி ஊரணி, மயிலிட்டி, பலாலி வயாவிளான், கட்டுவன். குரும்பசெட்டி, தோளக்கட்டி ஆகிய கிராமங்களில் மக்களின் காணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்பட்டதற்கு அமைய உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை விடுக்கிறது.
யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலம் முடிவடைந்தும் ஐந்தாவது ஜனாதிபதி மாற்றமாகியும் நாலாவது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல வாக்குறுதிகள் வழங்கியும் இதுவரை சுமார் 2900 ஏக்கர் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

கடந்த 10.04.2025 அன்று பலாலி வீதியின் ஒரு பகுதி நிபந்தனைகளுடன் பகல் நேரத்தில் மட்டும் திறந்து வைக்கப்பட்டதை வரவேற்கும் அதேநேரம் 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குழுவின் அனுமதி பெறப்பட்ட காங்கேசன்துரை. மயிலிட்டி, பலாலி போன்ற கிராமங்களில் விடுவிக்கப்படவிருந்த சுமார் 500 ஏக்கள் காணிகளில் 50 ஏக்கர் காணிகள் மட்டுமே இதுவரை மக்களின் தேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த காணிகளை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் இராணுவ கெடுபிடிகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தி நனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் சமமாகவும் சமத்துவமாகவும் நடாத்தப்படும் புதியதோர் இலங்கையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 5 மாதம் கழிந்தும் புதிதாக காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களின் துன்பத்தினை தமது அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தாது என்று கூறியிருந்தாலும் இனவாதமற்ற அரசியலை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் சிங்கள மக்கள் கூட ஆதரிக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்?

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் 6/5/2025 அன்று நடப்பதற்கு முன் வடக்கு மக்களின் வாக்குகளை பெற்ற நீங்களும், உங்களது அரசும் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் மக்களுக்கு காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் அதேநேரம் பின்வரும் கோரிக்கைகளை உங்களுக்கும். உங்கள் அரசுக்கும் முன்வைக்கிறோம்.

1. வலி வடக்கில் முப்படையினரதும் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

2. 1983 ஆம் ஆண்டு முதல் விமான நிலைய விஸ்தரிப்புக்கென கையகப்படுத்தப்பட்டும் இதுவரை எந்த வித பயன்பாடோ அபிவிருத்தியோ செய்யப்படாத காணிகள் உடனடியாக உரிமையாளரிடம் கையளிக்க வேண்டும்.

3.ஜனாதிபதி மாளிகை மற்றும் தையிட்டி விகாரை போன்ற காணிகள் தொடர்பாக விசேட அவதானம் எடுத்து நீதியான முறையில் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக காணிகள் மீளளிப்பதற்கான வெளிப்படையான நீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.

4. தற்போது அரசின் அமைப்புகளால் கையகப்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தப்படும் அனைத்துகாணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய முழுமையான வெளிப்படையான அறிக்கை ஒன்றை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

5. விடுவிக்கப்பட்ட காணிகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதில் உள்ள சவால்களை நீதியானதும் மனிதாபிமான முறையில் கையாண்டு காணிகளை பாதுகாப்பதற்கும் எல்லைகளை நிர்ணயிப்பதற்கும் குறைந்ததது வேலி போட்டு மின்சார இணைப்புக்களை பெற அரச நிதி ஒதுக்கீடு செய்து 2025 தொடக்கம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

6. இந்த பகுதிகளில் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தஉண்மையே. ஆகையால் நிதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாக்குறுதி அழித்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு காணிகளை விடுவிப்பதுடன் குறைந்தது வீடுகளை மீளக் கட்ட அல்லது புனரமைக்க திட்டமிடல் செய்து வருடாந்தம் இதற்கான நிதியினை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்தல் வேண்டும்,

7. இந்திய மீன்பிடிப்படகுகள் காரணமாக எமது மீன்பிடியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அனைவரும் அறிவார்கள். அதேநேரம் 1981ம் ஆண்டு வடக்கு மக்களுக்காக கட்டப்பட்டு 2017 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மயிலிட்டி உற்பட வடபகுதி மீனவர்களின் தேவைக்கு பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

8. கையகப்படுத்தப்பட்ட இந்திய இழுவைப்படகுகள் மற்றும் தென்பகுதியிலிருந்து வரும் பெரிய மீன்பிடி படகுகள் குறைக்கப்பட்டு உள்ளுர் மீனவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

9. மயிலிட்டி துறைமுகம் மயிலிட்டி மீனவர் சங்கத்தின் பராமரிப்பிற்கு வழங்கப்படவேண்டும். மீன்பிடி துறைமுகங்கள் நாடெங்கும் மீனவர் சங்கங்களின் முகாமையிலேயே உள்ளன. இருந்தபோதும் மயிலிட்டி துறைமுகம் இலங்கை நுறைமுக கூட்டுத்தாபனத்தின் பொறுப்பிலும் கடற்படையின் கட்டுப்பட்டிலேயே இதுவரை உள்ளது. மயிலிட்டி துறைமுகத்தின் நிர்வாகம் உடனடியாக மீனவர் அமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.

10.காங்கேசன்துறை கீரிமலை வீதி மற்றும் கட்டுவன் வசாவிளான் வீதி உற்பட மூடப்பட்டுள்ள அனைத்து வீதிகளும் உடன் திறப்பதுடன் அந்த வீதிகள் ஊடாக பொதுமக்கள் பிரயாணம் செய்வதற்கான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

11. நல்லிணக்க அடிப்படையில் தமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அழித்து சேதமாக்கப்பட்ட அனைத்து மத ஆலயங்கள் மற்றும் கோவில்களை விடுவித்து அரச செலவில் மீள் புனரமைப்பு செய்வதை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமல்லாமல் தேசிய மக்கள் சக்தியின் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் தமது தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு நீதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் என்று நம்பி களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் அனைவரிடத்திலும் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இந்த கோரிக்கைகளில் தேர்தலின் முன் இலகுவாக நிறைவேற்றக் கூடிய விடயமான மக்களின் அனைத்து காணிகளையும் உடன் விடுவிக்கக் கோரி அவர்களும் தமது கட்சியுடனும் அரசிடமும் அமைச்சர்களிடமும் ஜனாதிபதி அவர்களிடமும் பகிரங்க கோரிக்கை விடுக்கும்படியும். அத்துடன் இவ்விடயத்தில் தீர்வினை நடைமுறைப்படுத்தவதற்கு உரிமையாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி வெளிப்படையான பேச்சுவார்த்தை கேட்டுக்கொள்ளுகின்றோம். மூலம் காணிவிடுவிப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More