Home இலங்கை அரசுக்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்து பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்

அரசுக்கு காத்திரமான அழுத்தத்தை கொடுத்து பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள்

by admin

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

ஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை  தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் கொண்டுள்ளனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின்; அடையாளங்கள் அழிக்கப்பட்டு பாரிய புத்தர் சிலையொன்று நிறுவப்படுகின்றது.

எக்காலத்திலும் பௌத்த மக்கள் வாழ்ந்திராத இப்பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் இக்கட்டுமானமானது பிரதேச மக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் மேற்படி பிரதேசத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களின் முந்திரிகைச்செய்கை காணிகளையும் கிறீஸ்தவ சேமக்காலையையும் ஆக்கிரமிக்க தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் பிரதேச மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக கைவிடப்பட்டிருந்தன.

 ஆட்சிக்குழப்ப நிலையினை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இவ் ஆலயப் பகுதியில் சட்டவிரோதமாக (எந்த விதமான காணி அனுமதிப்பத்திரங்களுமின்றி) தங்கியுள்ள கொலம்ப மேதாலங்க தேரர் என்ற பௌத்த பிக்கு மிகவும் அவசர அவசரமாக புத்தர் சிலையை நிர்மாணித்து திறப்பு விழாச் செய்ய முற்படுவது இப்பிரதேச மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதோடு இது அமைதிக்குலைவிற்கும் வழிவகுக்கும்.

 அண்மைய நாட்களில் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் திருகோணமலை மாவட்டத்தில் தென்னமரவாடிப் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் சம்மளங்குளம் பகுதியிலும் இடம்பெற்று வருகின்றது.

 தமிழ் மக்களின் மரபுரிமையைச் சிதைக்க மேற்கொள்ளப்படும் இத்திட்டமிட்ட செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த தமிழ்மக்கள் பிரதிநிதிகள் விரைந்து செயற்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சிக்குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கு காத்திரமான அழுத்தத்தினைக் கொடுப்பதுடனூடாக திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வருமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். எனக் கோரியுற்ற தமிழர் மரபுரிமை பேரவையினர்

ஆட்சிக் குழப்ப நிலையில் தம்மீது  கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் உரிய கவனம் செலுத்தவில்லையென பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைந்து செயலாற்றுவீர்கள் என நம்புகின்றோம். எனவும்  அவர்கள் அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More